Friday, November 15, 2013

மழைநீர் சேகரிப்பு

மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரைத் திரட்டி, ஒருங்கே குவித்து, சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு, கால்நடைகளுக்கு, நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்குப் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கட்டடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.

சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, அதிகச் செலவு பிடிக்காத சிக்கனமான நீர் ஆதாரம். இத்திட்டம் உள்ளூரிலேயே கிடைக்கும் விலைமலிவான மூலப்பொருட்களைக் கொண்டு எளிதாகக் கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தக்கூடியது. கட்டடங்களின் மேற்கூரைகளில் சேகரிக்கப்படும் மழைநீர், பெரும்பாலும் நல்ல தரமானதாகவும் அதிக தூய்விப்புக்கு உட்படுத்தத் தேவையில்லாமலும் இருக்கிறது. வேறுவகை நீர் ஆதாரம் இல்லாத போது, ஆண்டு மழைப்பொழிவு 200மிமீ-க்கு கூடுதலான இடங்களில் குடும்பத்தின் குடிநீர் தேவைக்காக மழைநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்துவது சிறப்பானது.

மழைநீர் சேகரிக்க எளிமையானது முதல் சிக்கலானது வரை பல வகையான அமைப்புகளை உருவாக்கலாம். தரைவழியாகவோ கட்டடங்களின் மேற்கூரை வழியாகவோ மழைநீர் சேகரிக்கப்படுகிறது. அமைப்பின் திட்ட அளவு, செயல்திறன், மழைப்பொழிவின் அளவு ஆகியவற்றைப் பொருத்து மழைநீர் சேகரிப்பு வீதம் அமையும்.
Download As PDF

No comments:

Post a Comment