Friday, November 15, 2013

மறைந்துவரும் நம் பண்பாடுகளைக் காப்பாற்ற என்ன செய்யலாம்?:

மறைந்துவரும் நம் பண்பாடுகளைக் காப்பாற்ற என்ன செய்யலாம்?: இப்போதுள்ள நிலையை ஆய்ந்து யுனெசுகோ என்னும் உலக நிறுவனம் இந்த நூற்றாண்டில் தமிழ் மொழி மறைந்துவிடும் என்று கூறியிருக்கிறது. இதே நிலைமை நீடித்தால், தமிழ்ப்பண்பாடும் முற்றாக அழிந்து, தமிழர்கள் முகவரியற்றுப் போவார்கள் என்பது உறுதி. இதுபற்றி நாம் உண்மையாகவே கவலைப்படுவதாக இருந்தால், 'கன்னித்தமிழ்', 'காலங்கடந்த தமிழ்' என்றெல்லாம் வாய்வீச்சு வீசும் ஆரவாரங்களை நிறுத்திக்கொண்டு பின்வரும் பணிகளில் இன்று முதலே ஈடு படலாம்:
1. இயன்ற வரை அயல்மொழி கலவாமல் தமிழ் பேசுவோம்; எழுதுவோம்.
2. நமது பெயர் பிற மொழியில் இருநóதால், அதைத் தமிழாக்கிக்கொள்வோம்; அல்லது வேறு தமிழ்ப் பெயர் வைத்துக்கொள்வோம். குழந்தைகளுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைப்போம்.
3. பிற மொழியில் ஒப்பமிடும் வழக்கம் இருந்தால் அதை ஒழித்துத் தமிழில் ஒப்ப மிடுவோம்.
4. நமது பெயரின் தலைப்பெழுத்தைத் தமிழில் போடுவோம்.
5. நம் வண்டிகளின் எண்ணுப்பலகையில் தமிழில் எண்களை எழுதுவோம்.
6. தொலைபேசி அழைப்புக்கு "ஹலோ" என்று விடை சொல்வதை விட்டு "வணக்கம்" என்று சொல்வோம்.
7. திருவள்ளுவர் ஆண்டையும் தமிழ்த் திங்கட்பெயர்களையும் பயன்படுத்துவோம்.
8. நம் குடும்ப நிகழ்ச்சிகளில் ஆரியச் சடங்குகளையும், வடமொழி மந்திரங்களையும் ஒழிப்போம்.
9. திருக்கோயில் வழிபாட்டில் தமிழில் போற்றிகள் சொல்லச் செய்வோம்.
10. தீபாவளி, பிள்ளையார் சதுர்த்தி முதலிய அயற்பண்பாட்டுப் பண்டிகைகளைக் கொண்டாடுவதைக் கைவிடுவோம்.
11. தமிழ் இசை பயில்வோம்; நம் குழந்தைகளுக்குப் பயிற்றுவோம். தமிழில் பாடுவோரைத் தட்டிக்கொடுப்போம்; பிற மொழியில் பாடினால் தட்டிக் கேட்போம்.
12. நாம் தமிழர்களாகப் பிறந்ததற்காகப் பெருமைப்படுவோம். நம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்வோம்; நம்மை 'இந்து' என்று சொல்வதை ஏற்க மறுப்போம்.
இந்நெறிகளை நாம் அனைவரும் கடைப்பிடித்தால், எஞ்சியிருக்கும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாக்கலாம்; இழந்த பண்பாடுகளையும் மீட்கலாம். நாம் வாழும் சூழல் எத் தகையதாக இருந்தாலும், நமது பண்பாட்டின்மீது மதிப்புக்கொண்டு, அதன் தொடர்பை விடாது வாழ்வோம். நீர்நிலையில் உள்ள தாமரையைக் கதிரவன் தந்தையாகவும், தண்ணீர் தாயாகவும் இருந்து வளர்க்கின்றன. எனினும், அதன் வேரைப் பிடுங்கி நீரிலேயே விட்டால், தாயாகிய தண்ணீரே அதை அழுகச்செய்து கொன்றுவிடும்; கரையில் எடுத்துப் போட்டால், தந்தையாகிய கதிரவனே அதனைக் காயச் செய்துகொன்றுவிடும். தாமரை மண்ணில் வேரூன்றி இருக்கும் வரையில்தான் உயிர்வாழ முடியும். அது போல் மக்களினம் தம் பண்பாட்டில் பற்று விடாமல் இருக்கும் வரையில்தான் தனி இனமாக வாழமுடியும். எனவே, நாமும் நமது பண்பாட்டைப் பாதுகாத்து, அதன் தொடர்பை விடாமல் 'என்றும் உள தென்தமிழ்' இனமாக உலகில் இன்புற்று வாழ்வோமாக !
சங்குவெண் தாம ரைக்குத் தந்தைதாய் இரவி தண்ணீர்.
அங்குஅதைக் கொய்து விட்டால், அழுகச்செய்து அந்நீர் கொல்லும்.
துங்கவன் கரையில் போட்டால், சூரியன் காய்ந்து கொல்வான்.
தங்களின் நிலைமை கெட்டால், இப்படித் தயங்கு வாரே!
விவேகசிந்தாமணி-
14.

முனைவர் இரா. திருமுருகன், புதுச்சேரி, இந்தியா
மின்னஞ்சல் :
irathirumurugan@yahoo.co.in
Download As PDF

1 comment: