Monday, January 30, 2012

சமையல் குறிப்புகள்



பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.

பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

நெய்யை காய்ச்சி இறக்கும் போது 1/2 தேக்கரண்டி வெந்தயத்தை போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும்.

கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்துச் சமைக்க வேண்டும்.

குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும்.

தோசைக் கல்லில் தோசை வராமல் இருந்தால் வெங்காயத்தை அதில் தேய்த்து விட்டு பின் தோசை சுட்டால் தோசை நன்றாக வரும்.

அரிசி, பருப்பு வகைகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் போது காய்ந்த வேப்பிலைகளை போட்டு வைத்தால் புழு பூச்சிகள் அண்டாது.

அடி பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய சிறிது நீரில் வெங்காயத்தை போட்டு அதே பாத்திரத்தை கொதிக்க விட்டால் சுத்தமாக மாறிவிடும்.

முள்ளங்கியை வேக வைக்கும் போது சிறிது சர்க்கரையை சேர்த்து வேக வைத்தால் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கியதும் மோர் கலந்த நீரில் போட்டு விட்டால் கருக்காமல் இருக்கும்.

முட்டையை வேக வைக்கும் போது தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து விட்டால் சீக்கிரம் வேகுவதுடன் முட்டையின் ஓட்டையும் எளிதில் பிரிக்கலாம்.

நன்றாக முற்றிய தேங்காயை துருவுவதற்கு கஷ்டமாக இருக்கும். அதற்கு தேங்காயை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு துருவினால், மிகவும் எளிதாகத் துருவலாம்.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதில் சிறிது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

பொங்கல் செய்யும் போது நீர் அதிகமாகி விட்டால், அதில் வறுத்த ரவையை ஒன்று அல்லது இரண்டு கைப்பிடி போட்டு கிளறினால் பொங்கல் நன்கு சேர்ந்து கெட்டியாகி விடும்.

இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் கலந்து வைத்தால், இட்லி மிருதுவாக இருக்கும்.

உளுந்து வடை செய்யும் போது ஒரு கைப்பிடி கொத்தமல்லித்தழையை சேர்த்து ஆட்டி செய்தால், நறுக்கிப் போட்டு செய்வதை விட வாசனையாக இருக்கும்.

ரவா தோசை செய்யும் போது 2 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென சுவையாக இருக்கும்.

முதல் நாள் வாங்கிய கீரையை மறுநாள் பயன்படுத்தும் போது கீரையின் வேர்பகுதி தண்ணீரில் இருக்குமாறு வைத்திருந்தால், கீரை மறுநாள் வரை வாடாமல் இருக்கும்.

அப்பளம், வடாம், வற்றல் போன்றவை வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிது பெருங்காயத்தைப் போட்டு வைத்தால், அவை அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.

உலர் திராட்சையை காற்றுப் புகாவண்ணம் நன்கு மூடிய பாட்டிலில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.

காபி போட்ட பின், அந்த காபி தூளை காயவைத்து பாத்திரம் துலக்கினால், பாத்திரங்கள் மின்னும்.

கடலைப் பருப்பை வறுத்து, பின் போளி செய்தால், போளி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

பட்டாணியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்தால், வெந்ததும் வாசனை நன்றாக இருக்கும்.

தயிர் பச்சடி நீர்த்துப் போய்விட்டால், அதனுடன் சிறிது நிலக்கடலையை வறுத்து பொடியாக அரைத்து சேர்த்தால் பச்சடி கெட்டியாகிவிடும்.

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால், தக்களிப் பழத்தையோ அல்லது உருளைக்கிழங்கையோ வெட்டிப் போட்டு கொதிக்க வைத்தால் உப்பு குறைந்துவிடும்.

சாம்பார் செய்யும் போது அதனுடன் ஒரு நெல்லிக்காயைச் சேர்த்துச் செய்தால், சாம்பாரின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

சேப்பங்கிழங்கை தோல் உரித்ததும் அதன் கொழகொழத்தன்மை போக சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்து விட்டு பிறகு எடுக்க வேண்டும்.

அடைக்கு அரைக்கும் போது சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் அடை மொறுமொறுப்பாக இருக்கும்.

கொழுக்கட்டை செய்யும் போது மாவுடன் சிறிது பால் சேர்த்துப் பிசைந்து செய்தால் கொழுக்கட்டை விரியாமல் இருக்கும்.
உளுத்தம்வடை செய்யும் போது சிறிதளவு இட்லி மாவு சேர்த்துச் செய்தால், வடை சுடும் போது அதிகம் எண்ணெய் குடிக்காததோடு, சுவையும் நன்றாக இருக்கும்.

பாகற்காயை சிறிது நேரம் உப்பு நீரில் ஊறவைத்து பின்னர் சமைத்தால், கசப்பு குறைவாக இருக்கும்.

கிழங்குகளை வேக வைக்கும் முன், உப்பு நீரில் சிறிது நேரம் ஊறவைத்த பின் வேக வைத்தால் கிழங்கு விரைவில் வெந்து விடும்.

இட்லிக்கான அரிசியுடன் சிறிது அவல் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போன்று இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், பூரி நமத்துப் போகாமல் நீண்ட நேரம் இருக்கும்.

தேங்காய் சட்னி செய்யும் போது, பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிய பின் அரைத்தால், சுவை கூடுதலாக இருக்கும்.

முட்டை வேக வைக்கும் போது, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால், முட்டை ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.

மைக்ரோவேவ் அவனில் சமைக்கும் போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும். இல்லையென்றால் சிறிதாக நறுக்கியவை வெந்தும், பெரிதாக நறுக்கியவை வேகாமலும் இருக்கும்.

அரிசியால் செய்த உணவுகளை மைக்ரோவேவ் அவனில் மறுமுறை சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், விரைவில் சூடாகும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு தயிர் அல்லது முட்டை சேர்த்துச் செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.

மீனை சுத்தம் செய்வதற்கு முன் சிறிது நேரம் உப்பு சேர்த்து கிளறி வைத்திருந்தால், மீனிலிருந்து வாடை எதுவும் வராது.

இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவைத்தால், இறால் வாடை மிகவும் குறைவதோடு, சுவையும் கூடுதலாக இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சோயா மாவும் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்.

Download As PDF

நண்டு மசாலா



தேவையானவை :
நண்டு - ஐந்து
நல்லெண்ணெய் - 25 மில்லி
சோம்பு - 10 கிராம்
மிளகாய் வற்றல் - ஒன்று
கறிவேப்பிலை - பத்து
பெரிய வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 10 கிராம்
தக்காளி - 50 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
சோம்பு, சீரகப் பவுடர் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் - அரைமூடியில் பாதியளவு
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
உப்பு - தேவையான அளவு



செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவேண்டும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். தேங்காயை தனியாக அரைத்து வைக்கவேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் பொன்னிறமாக வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். மசாலா பொடிகள், தக்காளி விழுது, நண்டு, உப்பு சேர்த்து ஒருநிமிடம் வதக்க வேண்டும். இதில் அரைலிட்டர் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் வேகவிட வேண்டும். கொதித்து வரும் போது தேங்காய் விழுது சேர்த்து, சற்றே கெட்டியாகும் வரை வேகவிட வேண்டும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் நல்லெண்ணெய் விட்டு கிளறி கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்க வேண்டும். சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தி, நாண், ரொட்டியோடு சாப்பிட விரும்பினால், முந்திரிபருப்பு விழுது சேர்க்க வேண்டும்.



சமையல் நேரம் : 20 நிமிடங்கள்.

Download As PDF

Sunday, January 29, 2012

"அன்றும் இன்றும் என்றும்."இளையராஜாவின் இசை

இளையராஜா 
"1990 –இளையராஜாவின் இசை  வாழ்க்கையில் உச்சத்திலிருந்த நேரம். அப்பொழுது தமிழ், தெலுகு இரண்டு மொழிகளிலும் வருடத்திற்குக் கிட்டத்தட்ட இருபது படங்கள் இசையமைத்துக் கொண்டிருந்தார் (இப்படித் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேல்) ஒரு படத்தில் சராசரியாக ஐந்து பாடல்கள். பல படங்களில் எல்லா பாடல்களுமே பிரபலமாகிக் கொண்டிருந்தன. பெரும்பாலான கலைஞர்கள் இப்படி உச்சத்தில் இருக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட வழிமுறையை வகுத்துக் கொண்டு அந்த வார்ப்பிலேயே தங்கள் படைப்புகளை மரச்சட்டத்தில் களிமண் அடைத்துப் பிள்ளையார் உற்பத்தி செய்யும் முறையில் இறங்கிவிடுவார்கள். (இதை இன்றைய இசையமைப்பாளர்கள் எல்லோரிடமும் எளிதில் பார்க்க முடிகிறது).

ஆனால் இதற்கு மாறாக அப்படி ட்யூன்களைப் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்த காலத்தில் கூட, பல புதுமைகளை முயற்சித்துப் பார்த்தவர் இளையராஜா. இன்றைய பாடல் அந்த வகைப் புதுமைகளில் ஒன்று. சுருதி விலகல் அதிகமில்லாமல் அப்பட்டமான சாஸ்திரிய இராகம் ஒன்றில் கிராமத்து இசையை, அதிலும் கிண்டலும் நகைச்சுவையும் இழையோடும் ஒரு பாடலை இளையராஜா தந்திருக்கிறார். ஒருவகையில் இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவருடைய முதன் முதல் பாடலான “மச்சானைப் பாத்தீங்களா” வில் கிராமத்து மணம் தவழும் வரிகளுக்கு வெர்ஸ்டர்ன் கார்ட்களில் கித்தார் இசையைத் தந்தவர்தானே!

பாடல் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வரும். இதைச் சொன்னால் பலருக்கும் நம்ப முடியாது, அவ்வளவு பெரிய பாடல் கிடையாது என்றுதான் சொல்வார்கள். காரணம் பாடல் செல்லும் வேகத்திலும் இதில் பின்னிப் பிணைந்துவரும் மாறுபட்ட இசையிலும், கதியிலும் நேரம் போவதே தெரியாது. பாடலின் ஆரம்பத்தில் வரும் முன்னீட்டில் அற்புதமான வயலின் பின்னல்கள் இளையராஜாவின் முத்திரை. இந்த முறையைத் தென்றலே என்னைத் தொடு, சிங்காரவேலன் உள்ளிட்ட பல படப்பாடல்களில் வித்தியாசமாகக் கையாண்டிருப்பார். சரணத்திற்கு முன் பாடலின் முத்திரையான விரைவு ட்ரம் பீட் தொடங்கும். இது பாடலின் ஆதாரமாக முழுவதும் வரும். தொடர்ந்து வரிகளுக்கு முன்னதாக “ஹே… தந்தன தந்தன தந்நா…” என்பதை ராஜாவைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு அருமையாகப் பாடமுடியாது. Authentic Folk என்பார்களே அந்த வகையைச் சேர்ந்தது இது. பல்லவியின் அமைப்பு வித்தியாசமானது. “சொர்க்கமே என்றாலும்ம்ம்ம்ம்ம்…” என்று இழுக்கும் முதல்வரியைத் தொடர்ந்து “… போல வருமா” என்று சடாரென முடிவது முரண்பாடாக இருக்கும். அதே போல அடுத்த இரண்டு வரி இரட்டையும் நீட்டி முழக்கிப், பின் வெட்டி முடிப்பதாக இருக்கும். பாடலின் பல இடங்களில் இதைப்போலவே அடுத்தடுத்த வரிகள் வருவது பாடலுக்கு ஒரு துள்ளல் கதியைத் தரும். இப்படி நீட்டி முழக்கிப் பாடுவதை நம்மூரில் பல நாட்டார் பாடல்களில் காணலாம். இடையீடுகளில் வரும் இசை அற்புதமானது. ‘இவ்வூரு என்ன ஊரு, நம்மூரு ரொம்ப மேலு’ வரிகளுக்குப் பின்னே வரும் வயலின் அற்புதமானது.

பாடலின் பெரும்பாலான இடங்களில், வயலின், லீட் கிட்டார், பேஸ் கிட்டார், க்ளாரினெட், ட்ரம்ஸ், சிந்தஸைஸர், கீபோர்ட் என்று நம்மூருக்கு அந்நியமான வாத்தியங்களே வரும். ஒரு இடத்தில் தப்லா கூட வரும். ஏற்கனவே சொன்னதைப்போல ஹம்ஸாநந்தி ராகத்தில் திரையிசை மெட்டமைத்தவர் ராஜா ஒருவர்தான். ஆனால் இந்தப் பாடலில் நம்மூருக்குப் பரிச்சயமான மிருதங்கம், வீணை, நாதஸ்வரம், போன்றவையோ, உருமி, பறை, நையாண்டி மேளம், உடுக்கு, போன்ற நாட்டார் வாத்தியங்களோ கிடையாது. இப்படி சுத்தமான கர்நாடக சங்கீதத்தில் மெட்டமைத்து, அதற்கு மேற்கத்திய வாத்தியங்களைக் கொண்டு இசையமைத்து நாட்டுப்புறப் பாடலின் சாயலை அற்புதமாகக் கொண்டுவந்திருப்பது இளையராஜாவின் மேதைமை. இந்த அளவுக்குப் பரிசோதனைகளை இந்தியத் திரையிசைக் கலைஞர்களிடம் அதிகம் காணமுடியாது.

இளையராஜாவின் ஆரம்ப காலத்திலிருந்தே பல கிராமியப்பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் ஜானகி. இளையராஜா-ஜானகி இரட்டை பல அற்புதமான பாடல்களை நமக்குத் தந்திருக்கிறது.

•சங்கத்தில் பாடாத கவிதை – ஆட்டோ ராஜா
•பொன்னோவியம் கண்டேனம்மா – கழுகு
•நான் தேடும் செவ்வந்திப்பூவிது – தர்மபத்தினி
•தென்றல் வந்து தீண்டும்போது – அவதாரம்
•பூமாலையே தோள் சேரவா – பகல் நிலவு
•ஒரு கனம் ஒருயுகமாக – நாடோடித் தென்றல்


அந்த வகையில் இந்தப் பாடலும் ராஜா-ஜானகி ஜோடியின் அற்புதமான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. எனவே இது படமாக்கப்பட்ட விதம் எனக்குத் தெரியாது. ஆனாலும் இதை யாராலும் ஊகித்துவிட முடியும் மஞ்சள் அல்லது ‘ராமராஜன்’ கலரில் (இதை பஞ்சு முட்டாய் பிங்க் என்றும் சொல்வார்கள்) பளபள சட்டை, உழைக்கும் கரங்கள் எம்.ஜி.ஆரின் விசிறி மடிப்பு வேட்டி சகிதமாக லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதட்டுடனும், கௌதமி அரக்கு, மஞ்சள், சிவப்பு போன்ற ஏதாவது ஒரு ‘குல்ட்-கலர்’ குல்ட் பாணி தார்ப்பாய்ச்சிய புடவைக்கட்டுடனும் சிங்கப்பூரில் வெற்றிலைச்சாற்றை துப்பியிருப்பார்கள் என்பது நிச்சயம். (யாராவது இதை உறுதி செய்யவும்).

ஏற்கனவே இதைப் பற்றி எழுதியாகிவிட்டது. தமிழ்த் திரையுலகில் திறமை அதிகமில்லாமல் இளையராஜாவின் கடைக்கண் பார்வையால் கடாட்சம் பெற்று கொடிகட்டிப் பறந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அன்றைய காலத்து மோகன், சுரேஷ் தொடங்கி, முரளி, ராமராஜன், ராஜ்கிரண் வரை நிறைய பேரை இப்படி உதாரணம் காட்டலாம். இவர்களுக்குள்ளேயும் நம்ம பசுநேசன் ஐயாவுக்கு ராஜாவின் கருணை அதிகமாகவே பொழிந்திருக்கிறது. பின்னாட்களில் ராமராஜன், மாண்புமிகு-ஆகி தில்லியில் மக்களவைக்குச் சென்றதில் இந்தப் பாடலின் பங்கு எந்த அளவிற்கு இருக்கும் என்பது கேள்விக்குரிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அங்கே மத்திய அரசின் சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறையின் காபினெட் அமைச்சருக்கு ஆலோசனை சொல்லும் கமிட்டியில் ராமராஜன் சேர ‘சொர்க்கமே என்றாலும்’ கட்டாயம் ஒரு முக்கிய தகுதியாக இருந்திருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை."
Download As PDF

எனக்கு பிடித்த திரைப்பட பாடல்

பத்ரி எனும் தமிழ் படத்திலிருந்து கீழ்வருமாறு ,,,
"காதல் சொல்வது உதடுகள் அல்ல,
கண்கள் தான் தலைவா,
கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல,
கவிதைகள் தலைவா,

கவிதை என்பது புத்தகம் அல்ல,
பெண்கள் தான், சகியே,
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல,
நீ மட்டும், சகியே,

அடடடடா, இன்னும் என் நெஞ்சம்,
புரியல்லயா?
காதல் மடையா?

இது என்னடி, இதயம் வெளியேறி,
அலகின்றதே,
காதல் இதுவா?

எப்படி சொல்வேன், புரியும் படி,
ஆளை விடுடா!

மன்னிச்சுக்கடி, காதல் செய்வேன்,
கட்டளை படி,

காதல் சொல்வது உதடுகள் அல்ல,
கண்கள் தான் தலைவா,
கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல,
கவிதைகள் தலைவா,

படபடக்கும், எனது,
விழிபார்த்து நடந்திக்கணும்,
சொல்வது சரியா?

தவறு செய்தால், முத்தம்,
தந்து என்னை திருத்திக்கணும்,
தண்டனை சரியா?

எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய்,
சொல்லிவிடுடா,

சொல்லுகிறேன், இப்பொதொரு,
முத்தம் குடுடி,

காதல் சொல்வது உதடுகள் அல்ல,
கண்கள் தான் தலைவா,
கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல,
கவிதைகள் தலைவா."
Download As PDF

உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை online-ல் தேர்வு செய்யலாம்




தனியார் Mobile நிறுவனங்கள் வந்த பிறகு BSNL (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்த BSNL நிறுவனத்திற்கு புத்துணர்ச்சி வந்துள்ளது. BSNL நிறுவனம் ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை இனி நீங்கள் Online-ல் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த வசதியை முதன் முதலில் நவம்பர் 1, 2011- ல் ஆந்திராவில் அறிமுகப்படுத்தியது BSNL நிறுவனம். மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த வசதியின் மூலம் 1.2 லட்சம் பேர் புதிதாக சேர்ந்தனர். இந்த மாபெரும் வரவேற்ப்பை அடுத்து இந்த வசதியை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளது BSNL நிறுவனம். இந்த வசதியின் மூலம் 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என BSNL கணித்துள்ளது.

BSNL நிறுவனத்தின் சேர்மன் R.K. Upadhyay அறிவிப்பு கீழே

“Enthused by the success of the scheme in Andhra Pradesh, BSNL has now decided to launch the scheme all over the country. BSNL will set targets for the scheme after watching the initial response. We expect that the scheme will attract more than 20 lakh new subscribers”

ஆன்லைனில் விருப்பமான BSNL நம்பரை தேர்வு செய்ய:

சென்னை வாடிக்கையாளர்கள்- Choose Your Mobile Numbers

தமிழ்நாட்டின் இதர பகுதியினர் - Choose Your Mobile Numbers

இதர மாநிலத்தில் வசித்தால் – Choose Your Mobile Number


நீங்கள் இருக்கும் பகுதிக்கு ஏற்ப உள்ள link-ல் click செய்து BSNL தளத்திற்கு செல்லவும். அங்கு இடது புறத்தில் நம்பர்களின் பட்டியல் இருக்கும். இதில் ஒவ்வொரு link-ல் சுமார் 98,000 நம்பர்களுக்கு மேல் உள்ளது. அதில் உங்கள் பிடித்த விருப்பமான நம்பரை தேர்வு செய்த பின்னர் மேலே உள்ள RESERVE NUMBER என்பதை click செய்யவும்.

அதில் உள்ள Reserve Number அழுத்தியவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய தொடர்பு மொபைல் எண்ணை கொடுத்து கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும்.

உங்கள் மொபைல் எண்ணுக்கு 7 இலக்க பின் நம்பர் SMS வரும், ஒருவேளை SMS வரவில்லை என்றால் அங்கு கொடுத்துள்ள 7 இலக்க PIN நம்பரை அதில் type செய்து கொள்ளவும். அந்த PIN நம்பரும் முக்கியமானது குறித்து வைத்து கொள்ளுங்கள்.

அந்த PIN நம்பரை கொடுத்து Submit பட்டனை அழுத்தினால் உங்கள் நம்பர் பதிவு செய்யப்படும்.

இனி நீங்கள் அருகில் இருக்கும் BSNL அலுவலகத்தை 72 மணி நேரத்திற்குள் சென்று பதிவு செய்யப்பட மொபைல் எண்ணையும், அந்த PIN நம்பரையும் கொடுத்து மற்றும் எப்பொழுதும் போல ID PROOF, ADDRESS PROOF கொடுத்து உங்கள் எண்ணை வாங்கிக் கொள்ளுங்கள்.
SMS மூலமாகவும் BSNL நம்பரை பதிவு செய்யலாம்:

NLIST <Space> Circle Code <space>1-5 digits

Example: NLIST<space>CHN<space>00117
என்ற பார்மட்டில் BSNL வாடிக்கையாளர்கள் – 53734, மற்ற வாடிக்கையாளர்கள் – 9494453734 என்ற எண்ணுக்கும் SMS அனுப்பி உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை பதிவு செய்து கொள்ளலாம்.

Download As PDF

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்




1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
Download As PDF

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி....."

மனதின் ஆரோக்கியம் நம்மிடம் தான் உள்ளது , நமது சோர்வை நாமே தீர்த்துக்கொள்ளலாம். 


உடலுக்கு ஏற்படுகிற நோய்களைத் தீர்க்க மற்றவர்கள் உதவியை, மருத்துவர்கள் சிகிச்சையை நாடிப் போகலாம்.

ஆனால், மனதுக்கு ஏற்படுகிற சோர்வை நாமாகவே நீக்கிக் கொள்வது நல்லது. மனதின் ஆரோக்கியம் அதிலேதான் உள்ளது. 
சோர்வு என்பது பெரிய விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால் போதும், ‘தீர்வு’ பிறந்து விடும்.

“மனம் சோர்வடையத் தொடங்குகிறதா? எழுந்திருங்கள்! ஒரே இடத்தில் உட்காராதீர்கள்! நகருங்கள்! நகருங்கள்!” என்று உந்தித் தள்ளுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். 

எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்களை மலைப்பாம்பு மாதிரி சுற்றிக் கொள்கிறதாம் மனச்சோர்வு! 

ஒரே அறைக்குள் அடைந்து கிடங்கும்போது இருதயத் துடிப்பு குறைகிறது. மூளைக்கும் பிராண வாயுவின் ஓட்டம் குறைகிறது. நுரையீரலுக்கு நல்ல காற்று வந்து சேர்வதும் தடைப்படுகிறது.

கொஞ்சம் சோர்வு வருகிறபோதே, காரணமிருக்கிறதோ இல்லையோ பரபரப்பாக நடைபழகி வருவது நல்லதென்கிறார்கள்.


நம்மில் பலருக்கு இயற்கையோடு செலவிட நேரம் இருப்பதில்லை. நம்மைவிடப் பல மடங்கு பிரம்மாண்டமானது இயற்கை. அத்தகைய இயற்கைச் சூழலில் உலவுகிற நேரங்களில் எல்லாம் உள்ளத்தில் உற்சாகத்தின் ஊற்றுக்கண் திறந்து கொள்கிறது.

மலைவாச ஸ்தலங்களுக்கோ, இயற்கையின் ஆளுமை நிறைந்த இடங்களுக்கோ சென்று வர, விடுமுறைக் காலம் பயன்பட வேண்டும்.

அடுத்ததாக, நமக்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணிக்கை முக்கிய மில்லை. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கூட, நெருக்கமான நம்பகமான நண்பர்கள் இருக்கிறார்களா என்பதே முக்கியம்.

அவர்களோடு மனம்விட்டுப் பேசி, வாய்விட்டுச் சிரிக்கும் போது சோர்வு நம்மை விட்டு நீங்குகிறது. சிரிப்பின்போது சத்தம் மட்டுமா வருகிறது?

இருதயத்துக்கும் மூளைக்கும் ரத்தம் பாய்கிறது. தசைகளின் இறுக்கம் குறைகிறது. மனதுக்குள் உற்சாகம் மலர்கிறது.

மனச்சோர்வு அகல இன்னொரு வழியும் இருக்கிறது, உனக்கும் கீழே உள்ளவர் கோடி! நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்றார் கவியரசு கண்ணதாசன்.

நமக்கும் கீழே இருப்பவர்களை நினைத்துப் பார்ப்பதில் மட்டும் மனச்சோர்வு அகல்வதில்லை. அவர்களுக்கு உதவிகள் செய்யும் போது, நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதுதான் என்கிற எண்ணம் பிறக்கிறது. 


அதாவது, மற்றவர்களுக்கு உதவுவதன் மூலமாக நமக்கு நாமே உதவி கொள்கிறோம் என்பதுதான் உண்மை.

புழக்கத்தில் இருக்கிற பாத்திரம் பளபளப்பாக இருக்கும். மற்றவர்களுக்குப் பயன்படுகிற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

உடலுக்கு ஏற்படுகிற நோய்களைத் தீர்க்க மற்றவர்கள் உதவியை, மருத்துவர்கள் சிகிச்சையை நாடிப் போகலாம்.

ஆனால், மனதுக்கு ஏற்படுகிற சோர்வை நாமாகவே நீக்கிக் கொள்வது நல்லது. மனதின் ஆரோக்கியம் அதிலேதான் உள்ளது.
 
Download As PDF

Wednesday, January 18, 2012

குத்துவிளக்கில் எத்தனை முகம், யாரை எப்படி வணங்க வேண்டும்


குத்துவிளக்கில் எத்தனை முகம்

1. குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்- மத்திம பலன்
2. இருமுகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை
3. மும்முகம் ஏற்றினால்- புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தி.
4. நான்கு முகம் ஏற்றினால்- பசு, பால், பூமி, சேர்க்கை
5. ஐந்து முகம் ஏற்றினால்- சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லட்சுமி கடாட்சம் ஆகியவை பெருகும்.



யாரை எப்படி வணங்க வேண்டும் 
* இறைவனை வணங்கும் போது தலைக்கு மேலே ஒரு அடி தூக்கி, இரு கரங்களையும் கூப்பி வணங்க வேண்டும்.
 
* குரு மற்றும் ஆசிரியர்களை வணங்கும் போது நெற்றிக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
 
* தந்தையை வணங்கும் போது வாய்க்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
 
* அறநெறியாளர்களை வணங்கும் போது மார்புக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
 
* நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.
Download As PDF

பாட்டி வைத்தியம்


பாட்டி வைத்தியம்

 
"பாட்டி, குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது''
 
"அஜீரண கோளாறா இருக்கும். வெத்தலையைக் கிள்ளி வாயில போட்டு மெல்லச்சொல்லு சரியாப் போயிடும்''.
 
இப்படி வாய் வழியாக, வம்சம் வழியாக மலர்ந்தது தான் பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படும் இயற்கை வைத்தியம். நாட்டுப்புற வைத்திய முறைகளில் ஒன்றே இயற்கை வைத்தியம். அது மனிதன் உடல் நலம் பேண ஆரம்பித்ததன் வரலாற்றை நினைவுபடுத்துகிறது. நாட்டுப்புற மக்களின் வாழ்வில் பழங்காலம் தொட்டு இன்றுவரை பாரம்பரியமாகப் புழக்கத்தில் இருந்து வரும் நாட்டுப்புற மருத்துவ முறைகளில் தமிழக நாட்டுப்புற மருத்துவம் மிகவும் புகழ்மிக்கது. 
 
அனுபவத்தின் மூலமாக கற்ற மருத்துவ முறைகளை, பரம்பரையாகப் பின்பற்றி நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவமே நாட்டுப்புற மருத்துவமாகும். இயற்கையோடு இணைந்து வாழ்க்கை நடத்திய மக்களின் பட்டறிவிலிருந்து தோன்றியது அது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே, நாட்டுப்புற மருத்துவமும் தோன்றியிருக்கக் கூடும்.
 
இயற்கை மூலிகைகளின் வளம் அறியப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக அவை உரிய முறையில் பயன்படுத்தப்பட்டு வருவது சிறப்புக்குரியது. இன்றளவும் புழக்கத்தில் இருப்பது அந்த மருத்துவமுறைக்கு கிடைத்த வெற்றியே. நாட்டுப்புற மருத்துவத்தை இயற்கை மருத்துவம், சித்தமருத்துவம், மந்திர மருத்துவம் என்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கிறார்கள். 
 
இயற்கைப் பொருட்களை மருத்துவத்திற்கு பயன்படுத்திக் கொள்வது இயற்கை மருத்துவமாகும். குறிப்பாக மருந்தாக உட்கொள்வதைவிட உணவாகவே உட்கொள்ளப்படுவது இந்த மருத்துவ முறையின் சிறப்பு. கசப்புக் காய்கறிகள், பழங்கள், இஞ்சி, மிளகு, வெந்தயம் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது இயற்கை மருத்துவத்தின் ஒரு பகுதியே.
 
பாட்டி வைத்தியம், கை வைத்தியம், கைமருந்து என்று சொல்லப்படும் வைத்தியமும் இயற்கை வைத்திய முறையே. பெரியோர் சொல்ல இளையோர் கேட்டுப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு அதிகமான எழுத்து சான்றுகள் கிடையாது. பல கிராமங்களில் இன்றும் கூட கைமருந்தால் குணமாகாத நோய்களுக்கே மருத்துவரை அணுகும் வழக்கம் உள்ளது.  
 
குழந்தைகளுக்கான பெரும்பாலான நோய்கள் கைமருத்துவத்திலேயே குணப்படுத்தப்படுகின்றன. தாய்ப்பாலின் மகத்துவமறிந்து மருந்துகளை தாய்ப்பாலில் கலந்துகொடுக்கும் வழக்கம் பழங்காலம் தொட்டே இம்மருத்துவ முறையில் இருக்கிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, இருமல், கக்குவான், உடற்கட்டிகள், ஜீரணக் கோளாறு போன்றவற்றுக்கு எளிதான மருத்துவ முறைகள் இயற்கை மருத்துவத்தில் உள்ளன.
 
பெரியவர்களுக்கான நோய்களுக்கும் இயற்கை மருத்துவத்தில் தீர்வுகள் உண்டு. உணவுமுறை, தட்ப-வெப்பமாற்றம், சூழல் மாசு, அதிக உழைப்பு, தூக்கமின்மை, மிதமிஞ்சிய உடலுறவு ஆகியவையே நோய்க்கு காரணம் என வரையறுக்கிறது இயற்கை மருத்துவம்.   மனிதனுக்கு வெப்பத்தினாலும், குளிர்ச்சியினாலும் ஏற்படும் நோய்கள் ஏராளம்.
 
அதற்கேற்ப வெப்ப நோய்களுக்கு குளிர்ச்சியான மருந்தும் (சூட்டை தணிக்க மோர் குடிப்பது), குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு சூடான மருந்தும் கொடுப்பது (சளிக்கு ஆவி பிடிப்பது) இயற்கை மருத்துவத்தின் சிறப்பு. உடல் வலிகளுக்கும் நாட்டுப்புற மருத்துவத்தில் எளிய மருத்துவ முறைகள் உள்ளன.
 
தலைவலி, பல்வலி, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, கபம், இருமல், வாதம், மூலம், கால் வீக்கம், மஞ்சள் காமாலை, இளநரை என சகல வித நோய்களுக்கும் இயற்கை மருத்துவத்தில் மருந்து உண்டு. காடு, இயற்கை சார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் என்பதால் விஷக்கடிகளுக்கு சிறப்பு மருந்துகளும் நிறைய உண்டு.   இயற்கை மருத்துவத்தில் மூலிகை இணைந்த மருத்துவ முறை சித்த மருத்துவமாக கருதப்படுகிறது.
 
இது தமிழ் மருத்துவம் என்றே வழங்கப்படுகிறது. எளிதில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு சிக்கனமான, பக்க விளைவுகளற்ற மருத்துவ சிகிச்சை அளிப்பது இதன் சிறப்பு. சித்தர்களான முன்னோர் அருளிய மருத்துவமே சித்தமருத்துவம் எனப்படுகிறது. `உடம்பால் அழியின் உயிரால் அழிவர்` என்று பாடிய திருமூலர் உள்ளிட்ட 18 சித்தர்கள், சித்த மருத்துவ முறைகளை பாடல் வடிவில் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
 
இவை நோய்க் காரணங்களை தெளிவாக விளக்குவதோடு சாதாரண மக்களாலும் பின்பற்றத்தக்க எளிய மருத்துவ சிகிச்சையை தீர்வாகத் தருகிறது.   நாட்டுப்புற மருத்துவ முறையில் மந்திரமருத்துவமும் ஒன்று. பழங்கால மனிதனின் மனரீதியான அச்சத்தைப் போக்கவும், இயற்கையைக் கட்டுப்படுத்தி பயன்பெறவும் உருவாக்கியதே மந்திர மருத்துவமாகும்.
 
மருத்துவம் இல்லாத நோய்களுக்கும், தீராத நோய்களுக்கும் மந்திர மருத்துவத்தை நாடுவது வழக்கமாக இருக்கிறது. தெய்வக்குற்றம், தீய ஆவிகளின் செயல், செய்வினை, பில்லிசூனியம், முன்னோர் செய்த பாவம் ஆகியவையே நோய்க்காரணம் என்கிறது மந்திர மருத்துவம். கோடாங்கி கேட்டல், வேப்பிலை அடித்தல், திருநீறு போடுதல், மந்திரித்தல் முறைகளில் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.
 
இது முழுக்க முழுக்க நம்பிக்கை மருத்துவம் என்பதால் உளவியல் மாற்றங்களிலேயே இதன் பயன்பாடு இருக்கிறது.   மருத்துவர், மருத்துவச்சி, நாட்டு வைத்தியர் போன்ற பெயர்களில் நாட்டுப்புற மருத்துவர்கள் இருந்துள்ளனர். முதியோர்களும், மூலிகையின் பயன் அறிந்தோரும் நாட்டுப்புற மருத்துவர்களே. செவிவழியாக, மரபு வழியாகவும், பழக்கப் பயிற்சியினாலும் இவர்கள் மருத்துவம் செய்கின்றனர்.
 
பரம்பரை பரம்பரையாக வைத்தியம் பார்ப்பவர்களும் உண்டு. பரம்பரை மருத்துவர்கள் சிலர், சில மருத்துவமுறைகளை வெளியே சொல்லாமல் ரகசியம் காத்து வந்துள்ளனர். வெளியே சொன்னால் பலிக்காது என்பது அவர்களது நம்பிக்கை. மருத்துவ உலகம் வெகு வேகமாக வளர்ந்துவிட்ட பின்னரும், இயற்கை மருத்துவமும், நாட்டுப்புற மருத்துவமும் நிலைத்திருப்பது அதன் பெருமையைக் காட்டுகிறது. 
 
`பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்`, `ஆற்றுநீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டும் போக்கும்`, `சனி தோறும் நீராடு`, நோயைக்கட்ட வாயைக்கட்டு`, `ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி` போன்ற பழமொழிகள் இயற்கை மருத்துவத்தை காலம்தோறும் சுமந்து வந்தவையாகும்.
 
நாட்டுப்புற பாடல்களிலும் மருத்துவ விளக்கங்கள் இருக்கின்றன. சித்தமருத்துவப் பாடல்கள் மருத்துவக் களஞ்சியமாக திகழ்கின்றன. நாட்டுப்புற மருத்துவம் உடல், மனம் சமூகத்தோடு பிணைந்திருப்பதால் சக்தி உடையதாக விளங்குகிறது. இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்கும், உணவுப் பழக்கத்திற்கும் மக்கள் மாற மனங்கொண்டு வருவது இயற்கை மருத்துவத்தின் சிறப்பே!
Download As PDF

கேரட் சாப்பிடும் முறை


கேரட் சாப்பிடும் முறை

 
கேரட்டை சிலர் சமைத்து சாப்பிட்டால் தான் நல்லதுன்னு சொல்வாங்க. சிலர் சமைக்காமல் அப்படியே சாப்பிடுறது தான் நல்லதுன்னு சொல்வாங்க. கேரட்டை சமைக்கும்போது அதில் உள்ள வைட்டமின்கள் சிதைந்து போகுது. அதனால் தான் சமைக்காமல் சாப்பிடணும்னு சொல்றாங்க. ஆனால், சமைக்கும்போதுதான் அதிகமான பலன் கிடைக்குது.
 
பச்சையாக சாப்பிட்டால், கேரட்டின் தடித்த தோலால், அதில் உள்ள பீட்டா கரோட்டினில் 25 சதவீதத்தை மட்டுமே நமது உடல் வைட்டமின் `ஏ' வாக மாற்றுது. ஆனால், சமைத்து சாப்பிடும்போது, இது 50 சதவீதமாக அதிகரிக்குது. எப்படி சாப்பிட்டாலும், அதன் மேல் தோலை சீவி, இரண்டு துருவங்களையும் வெட்டி விட்டு சாப்பிடுங்க. இந்த பகுதிகளில் தான் கேரட் செடி வளருதுக்கு தெளிக்கிற பூச்சிக் கொல்லிமருந்து அதிகமா தேங்கி நிற்குதாம்.
Download As PDF

காய்கறி சூப்


காய்கறி சூப்

 
அந்தந்த சீசனில் கிடைக்கும், விருப்பப்பட்ட காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். 
 
தேவையானவை:  
 
பொடியாக நறுக்கிய காய்கறிகள் - ஒரு கப்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 3
சில்லி சாஸ் - 1  ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1  ஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு  
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
வெங்காயத்தாள் (பொடியாக நறுக்கியது) - 2 ஸ்பூன்  
கார்ன்ஃப்ளார் - 1 ஸ்பூன்.
 
செய்முறை:
 
* முதலில் இஞ்சி, பூண்டு, மிளகாயை மிகவும் பொடியாக நறுக்குங்கள்.
 
* எண்ணெயைக் காய வைத்து இஞ்சி, பூண்டு, மிளகாய், காய்கறி சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 10  நிமிடம் கொதிக்க விடுங்கள்.
 
* பிறகு, சில்லி சாஸ், சர்க்கரை, தக்காளி சாஸ், சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கொதிக்கவிடுங்கள்.
 
* ஒரு கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரை கரைத்து சூப்பில் சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்கவிட்டு, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறுங்கள்.
Download As PDF