Wednesday, November 23, 2011

ஹைக்கு கவிதைகள்



மரம்


திருமணத்திற்கு   வாழை 
மரணத்திற்கு மூங்கில்
தொடரும் மரத்தின் உறவு 
தொட்டில் முதல் 
சுடுகாடு வரை மரம் 
வாழ்ந்தால் நிழல் 
வீழ்ந்தால் விறகு மரம் 
வெட்டும் வில்லனுக்கும் 
நிழல் தந்தது மரம் 
இயற்கையின் விசித்திரம்  
சிறிய விதை 
பெரிய விருட்சமானது.


புன்னகை


புன்னகை செய்வதற்கு 
மட்டுமே உங்கள் இதழ்களை 
பயன் படுத்துங்கள்
மற்றவர்கள் மனம் 
புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.



ஆன்மா

வெறும் கையோடு
உலகில் பிறந்தேன்
வெறும் காலோடு
உலக வாழ்வை நீத்தேன்
பிறப்பு, இறப்பு,
இந்த இரு நிகழ்வுகளுக்காக
மெய் உடலில்
சிக்கிக் கொண்டேன்
தாமரை இலை நீர் போல
உடலை விட்டு மறைந்து போனேன்.

வாழ்க்கை


விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று...
அரசியல்வாதிகள்: 
ஆயிரம் பாம்புகளிடம் சிக்கிய 
தவளை போல 
அரசியல்வாதிகளிடம் மக்கள். 
நன்ற lankasri கவிதை இனைய தளம் 
Download As PDF

நம் உடலுக்கு தேவையான சில மருத்துவ குறிப்புகள்


அல்சர் நோயை குணப்படுத்தும் வாழைப்பழம்

உள் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது.
பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
1. வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படாது.
2. உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை கோப்பை ஒலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள்.
3. தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.
4. இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

உடல் வெப்பம் தணிய

சிலரது உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல தெரியும்.
இத்தகைய உடல் அமைப்பை கொண்டவர்கள் ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களை 2 தேக்கரண்டி அளவு பசு நெய் விட்டு வதக்கி, அதோடு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் உடல் சூடு தணிந்து சம அளவை அடையும்.

மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும் முட்டை

மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதில் முட்டைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பகல் நேரங்களில் குறிப்பாக அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தவிர்க்க காலை சிற்றுண்டிக்கு ப்ரெட் டோஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து சாப்பிடலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஜாமுக்கு பதிலாக முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கொள்வது நல்லதாம்.
வெள்ளைக்கருவில் உள்ள புரதம், மூளை மற்றும் உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் என்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்கருவில் உடலின் அதிக கலோரிகளை எரிக்க தேவையான மூலப்பொருள் உள்ளதால் உடல் எடை கூடும் என்ற பயமும் வேண்டாம்.
தூக்கம், சுறுசுறுப்பு இரண்டுக்கும் முக்கிய காரணம் ஓரெக்சான் என்ற செல்கள். இந்த செல்கள் மூளையில் ஓரெக்சின் அல்லது ஹைப்போக்ரெடின் என்ற சுரப்புக்கு காரணமாகிறது.
இதில் பாதிப்பு ஏற்படும்போது நார்கோலக்சி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும். இந்த பாதிப்பில் இருந்து முட்டையின் வெள்ளைக்கரு பாதுகாப்பு அளிக்கிறது.
இதில் உடலுக்கு அத்தியாவசிய தேவையான அமினோ அமிலங்கள் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை மூளையில் உள்ள ஓரெக்சின் செல்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது.
இதனால் இவற்றின் செயல்பாடுகள் சீராக இருக்கும். இதன்மூலம் மூளை மற்றும் உடல் செயல்பாட்டில் புத்துணர்ச்சி ஏற்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நன்றி lankasri இனைய தளம்  
Download As PDF

பென்ட்ரைவினை பாதுகாக்க சில வழிகள்



இப்பொழுதெல்லாம் யூஎஸ்பி பென்ட்ரைவ் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ஏனெனில் கணணி பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
கணணி எப்படி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ அது போல் பென்ட்ரைவினையும் தெரியும் ஏன் என்றால் இப்பொழுது வரும் ம்யூசிக் சிஸ்டங்கள் எல்லாம் யூஎஸ்பி பென்ட்ரைவ் ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.
அது போலவே எல்சிடி, எல்இடி டிவிக்களும், டிவிடி ப்ளேயர்களும் பென்ட்ரைவினை ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது. அதனால் எல்லோருக்கும் பென்ட்ரைவினை பாதுகாக்கும் வழிகள் தெரிந்து கொள்ள ஆசை வருகிறது.
1. Disabled Autorun - ஆட்டோ ரன் நிறுத்தம்: பென்ட்ரைவினை கணணியில் செருகியவுடன் ஆட்டோ ரன் ஆகும். இதனால் இதில் உள்ள கோப்புகள் எந்த மென்பொருள் மூலம் திறக்க வேண்டும் என்று விண்டோஸ் காட்டும். இதன் மூலம் வைரஸ்களும் எளிதாக தொற்றும். இதை முதலில் தடுக்க வேண்டும். இதற்கு AutoRun Disable செய்ய வேண்டும்.
இதற்கு மைக்ரோசாப்டிலேயே தனியாக பேட்ச் மென்பொருள் கிடைக்கிறது. இதை நிறுவினால் உங்கள் கணணியில் சீடி, டிவிடி, பென்ட்ரைவ் எது போட்டாலும் தானாக ப்ளே செய்யாது. அதாவது Auto Play Run தானாக நடக்காது.
2. Scan Your Pen Drive - பென்ட்ரைவினை சோதித்தல்: ஒவ்வொரு முறை உங்கள் பென்ட்ரைவினை கணணியில் செருகும் பொழுது உங்கள் கணணியில் உள்ள ஆன்டிவைரஸால் கட்டாயம் சோதிக்க வேண்டும். இதன் மூலம் கணணியிலும் வைரஸ் வராமல் தடுக்க முடியும். அத்துடன் பென்ட்ரைவினில் வைரஸ் இருந்தாலும் தடுக்க முடியும்.
அதற்கு உங்கள் கணணியில் நல்ல ஆன்டிவைரஸ் கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும். ஆன்டிவைரஸ் நிறுவுவதோடு நின்று விடாமல் உங்கள் ஆன்டிவைரஸ் தினமும் அப்டேட் ஆகிறதா என்றும் சோதித்துக் கொள்ளுங்கள். பென்ட்ரைவினை செருகியவுடன் உங்கள் கணணியில் Go To > My Computer > சென்று அங்கு உங்களுடைய பென் ட்ரைவினை Right Click செய்து Scan செய்யவும்.
3. Safely Remove Your Pen Drive - பென் ட்ரைவினை பாதுகாப்பாக நிறுத்துதல்: இது முக்கியமான ஒன்று நிறைய பேர் இந்த தவறினை செய்கிறார்கள். அது என்னவென்றால் பென்ட்ரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென்ட்ரைவ் வழியாக திறப்பது. சரி திறப்பது கூட பரவாயில்லை அந்த கோப்பினை பென்ட்ரைவில் வைத்து கொண்டே வேலை செய்வது.
இதனால் என்னாகிறது பென்ட்ரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். இதனால் சீக்கிரம் பென்ட்ரைவ் பழுதாகிறது. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பென்ட்ரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணணியில் சேமித்து விட்டு பிறகு கணணியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது.
அடுத்து யூஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென்ட்ரைவினை பிடுங்குவது. எல்லோருமே யூஎஸ்பி பொருட்களான பென்ட்ரைவ், டிவிடி ட்ரைவ் பாக்கெட் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோஸில் இணைந்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.
அப்படி இல்லாவிடில் சிறு மென்பொருட்கள் இருக்கிறது. யூஎஸ்பியை நிறுத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நமக்கு தேவையான யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது வேறு எந்த யூஎஸ்பி வன் பொருட்களையும் இந்த மென்பொருட்கள் மூலம் நிறுத்திய பிறகு எடுக்கலாம்.
4. General Tips - சில பொதுவான வழிமுறைகள்: அடுத்து நம் உபயோகிக்கும் பென்ட்ரைவினை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வதற்காக வைத்திருக்கிறோம் என்பதற்காக அதை எப்பொழுதும் கழுத்திலேயே மாட்டி வைத்திருப்பது அல்லது மிகவும் சூடான பகுதிகளில் வைப்பது போன்றவைகளை கட்டாயம் தவிருங்கள்.
அத்துடன் வீட்டினுள் கணணி, ஸ்பீக்கர் அல்லது ஹோம் தியேட்டர்கள் மீது பென்ட்ரைவினை வைப்பதையும் தவிர்த்து விடுங்கள். ஏன் என்றால் இதில் எல்லாமே காந்தசக்தி இருப்பதால் சுலபத்தில் உங்கள் தகவல்கள் யூஎஸ்பி பென்ட்ரைவில் இருந்து காணாமல் போய் விடும்.
சில நேரங்களில் யூஎஸ்பி பென்ட்ரைவ் தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எடுத்து துடைத்து விட்டு கணணியில் உபயோகப்படுத்தாதீர்கள். தண்ணீரில் விழுந்த பென்ட்ரைவினை 48 மணி நேரங்கள் கழித்தே உபயோகிக்கவும்.
அந்த இடைவெளியில் உங்கள் பென் ட்ரைவினை சமையல் செய்து வைத்த பாத்திரத்தில் மிதமான சூடு இருக்கும் பட்சத்தில் அதன் மேல் வைத்தால் ஓரளவு தண்ணீர் இழுக்கும்.
அது போல உங்கள் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் உங்கள் பென்ட்ரைவில் இருக்கும் நீர் சுலபமாக வெளியேற்றப்படும். ஏன் என்றால் அரிசி நீரினை அதிகளவு உறிஞ்சும் தன்மை உடையது.
நன்றி lankasri தளம் 
Download As PDF

உங்கள் கணணியின் கமெராவை பாதுகாப்பு கமெராவாக மாற்றுவதற்கு


Computers Detailed History of Computersஉங்கள் கணணியில் உள்ள கமெராவினை பயன்படுத்தி நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ உரையாடலுக்கு பயன்படித்தியிருப்பீர்கள் மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு பயன்படுத்தியிருக்கலாம்.
உங்கள் கணணியில் உள்ள கமெராவினை பாதுகாப்பு(secruity) கமெரவாக எந்த உபகரணமோ அல்லது மென்பொருளோ இன்றி இணைய இணைப்பின் மூலம் மாற்றியமைக்க முடியும்.
இந்த மாற்றத்தினை செய்ய CAMMSTER .COM என்ற இணையம் உதவுகிறது. இந்த தளத்துக்கு சென்று PROTECT என்பதை கிளிக் செய்தால் உங்கள் பதிவு கோரப்படும்.
அதிலே உங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சீட்டு கொடுத்து பதிவு செய்து கொண்டால் உங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்கு செய்தி அனுப்பப்படும்.
அந்த சரிபார்ப்பு கோட்டின் மூலம் திறந்து கொண்டால் தற்போது தோன்றும் விண்டோவில் Cammster, Run Cammster Now பட்டன்களை முறையே கிளிக் செய்தல் வேண்டும்.
இப்போது உங்கள் வெப்கேம் செயற்படுத்துவதற்கான அனுமதி கோரப்படும் அதை ALLOW செய்தால் உங்கள் கணணியில் உள்ள கமெரா பாதுகாப்பு கமெராவாக செயற்பட்டும்.
எந்தவொரு அசைவு மாற்றங்களையும் படம் பிடித்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு படங்களாக அனுப்பி வைக்கும். அத்துடன் ஒலியினையும் ஏற்படுத்துவதுடன் பாதுகாப்பு வசதியினையும் கொண்டுள்ளது.
Download As PDF

Thursday, November 17, 2011

சில சமுக உணர்வுகளில்

மனைவியுடன் இருந்தால்...
என் உறவினர் ஒருவர், திருமணம், சடங்கு, நல்லது, கெட்டது என எங்கு சென்றாலும், தன் மனைவியையும் தவறாமல் அழைத்துச் செல்வார். இதனால், "இழவு வீட்டுக்கு போகும் போது கூட, பொண்டாட்டி இல்லாமல் போக மாட்டான்ய்யா...' என்று, பல்வேறு விதத்தில் அவரை உறவுகளும், நண்பர்களும் கிண்டல் செய்வதுண்டு.
ஒருநாள், அவரிடம், "ஏன் எங்கு சென்றாலும், மனைவி இல்லாமல் செல்வதில்லை...' எனக் கேட்டேன். அதற்கு அவர், "சம்சாரம் கூட ஒரு இடத்துக்கு போறதால், பல நன்மைகள் இருக்கு. முதலில், நண்பர்கள் கூட்டம் நம்மை தொந்தரவு செய்யாது. "மனைவியோடு இருக்காண்டா...' என, ஒதுங்கிக் கொள்ளும். இதனால், "தண்ணி', தம், அரட்டை, அதனால் வம்பு, சண்டை, கெட்டவன் என பெயரெடுப்பது எல்லாம் தவிர்க்கப்படும்.
"தம்பதியராய் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், குடும்பத்துடன் வந்த சந்தோஷம் அவ்வீட்டுக்காரர்களுக்கு கிடைக்கும். மேலும், மனைவியுடன் இருப்பதால், நாமும் கொஞ்சம் அடக்கி வாசிப்போம்; எந்தத் தவறும் நடக்க வாய்ப்பே இல்லை. நீங்களும் இதை பின்பற்றி வாருங்கள்; அதன் பலனை அப்போது புரிந்து கொள்வீர்கள்...' என்று ஒரு போடு போட்டார்.
அவர் சொன்னது உண்மை தான் என புரிந்தது. அவருக்கு ஒரு சபாஷ் போட்டு, மனைவி இல்லாமல் இனி எங்கும் செல்வதில்லை என முடிவும் எடுத்தேன்.
நண்பர்களே... பொது நிகழ்ச்சிகளில் மனைவியுடன் கலந்து கொள்ளுங்கள்; பல தவறுகளை அது தவிர்க்க உதவும். 


எங்கே போனது மனிதநேயம்?
சில நாட்களுக்கு முன், சென்னை மாநகர பஸ்சில், "பீக்-அவர்' நேரத்தில், பயணம் செய்து கொண்டிருந்தேன். பயணத்தின் நடுவில், டிரைவர், வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, எங்கோ சென்று விட்டார். சில நிமிடங்கள் கழித்து, அவர் திரும்பி வந்ததும், பயணிகள், அவரை பிடிபிடி என்று பிடித்து விட்டனர். அதற்கு அவர், சிறுநீர் கழிக்கச் சென்றிருந்ததாகக் கூறினார். அதையும் பொருட்படுத்தாமல், சிலர், அ<லுவலகத்திற்கு தாமதமாகி விட்டதாகக் கூறி, அவரிடம் சண்டையிட்டனர்.
அதற்கு அவர், தனக்கு சர்க்கரை வியாதி உள்ளதாகவும், அதனால் சிறுநீர் பிரச்னையில் அவதிப்படுவதாகவும் தெரிவித்து, மன்னிப்பு கேட்காத குறையாக வண்டியை கிளப்பினார்.
அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது. என்ன உலகமிது? டிரைவரும் மனிதர் தானே? சிறுநீர் வந்தால் அவர் என்ன செய்வார்? எங்கே போனது மனிதநேயம்?
இவர் வசைமொழி வாங்குவதற்கு, போக்குவரத்துத் துறையும் ஒரு காரணம். இவர் போன்ற சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு, அலுவலகப் பணி தரலாமே!
யோசிப்பரா?


வளர்ந்த குழந்தைகளின் நினைவாற்றல்!
குழந்தைகளின் நினைவாற்றல் பற்றி, அக்., 30, 2011 வாரமலர் இதழில், இ.உ.இ., பகுதியில் கிரிஜா ஜின்னா, ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதோ இந்த, "வளர்ந்த குழந்தை'களின் நினைவாற்றலை கேளுங்கள்...
சென்னையில் மிக பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள பெண்கள் கல்லூரி அது. அந்தக் கல்லூரியில் படிக்கும் சில பெண்கள், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு, "டிவி'யில் பேட்டி கொடுத்தனர். சிரிப்பு வரவழைக்கும், சுவையான நிகழ்ச்சி அது.
பெண்களின் பொது அறிவுத் திறன் எப்படி உள்ளது என்பதை பரிசோதிப்பதாக, அந்த, "அண்ணாச்சி' சில கேள்விகளைக் கேட்டார்.
அதில் ஒன்று, "கணித மேதை யார்?' என்பது!
நவ நாகரிக உடையில் இருந்த அந்தப் பெண்கள் கூறிய பதில் என்ன தெரியுமா? "எங்களுக்கு கணக்கு வகுப்பு நடத்தும், பேராசிரியை தான்...' என, பதில் தந்தனர். சிரிப்பு நிகழ்ச்சி நடத்திய அந்த, "அண்ணாச்சி'க்கு, சிரிப்பை மீறி, "பகீர்' அதிர்ச்சி தான் ஏற்பட்டது. மீண்டும் அதே கேள்வியை கேட்டார். "திருதிரு'வென முழித்து, அசடு வழியும் வாயை மூடிச் சிரித்தனர், அந்தப் பெண்கள்!
"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்று கேட்டவர்களை ஒடுங்க வைத்து, "பெண்களுக்கு படிப்பு வேண்டும்...' என, பாரதியார் ஒரு பக்கம் குரல் கொடுக்க, "நான் பட்ட கஷ்டம், என் குழந்தை படக் கூடாது...' என, தாய் தன் பெண்ணை கல்லூரிக்கு அனுப்ப, அப்பெண்ணோ, "கண்டதே காட்சி... கொண்டதே கோலம்...' என, "கிறுகிறுக்க' வைக்கும் நிலையில், "படிக்கிறது!' என்னத்தைச் சொல்ல!
 நன்றி தினமலர் ( இது உங்கள் இடம் )
Download As PDF

குழந்தைகள் பற்றி சில குறிப்புகள்

கொலுசு அணிவிப்பது ஏன்? 
கொலுசு அணிவது என்பது ஓல்டு பேஷன் என்பவர்களும் உண்டு. ஆனால், இந்த பாயிண்டுகளை படித்து பாருங்கள், "கொலுசு' ஆச்சரியப்பட வைக்கும். தங்கத்துக்கு அடுத்து அத்தனை பெருமைகளும் கொண்டது வெள்ளி. வெள்ளி நகைளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் சொல்லியிருக்கின்றன. நம் உடம்பில் உள்ள தேவையில்லாத சூட்டை உடனுக்குடன் வெளியேற்றி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இன்னொரு ஸ்பெஷல் விஷயம் சருமத்தை ஆரோக்கியமாக ஜொலிக்க வைக்கும்.
குழந்தைக்கு கொலுசு போடுவது குழந்தையின் உணர்வுகளை அம்மாவிற்கு உணர்த்தத்தான். தூளியில் படுத்திருக்கும் குழந்தை விழித்ததும் காலை ஆட்ட ஆட்ட கொலுசு சப்தமிட்டு குழந்தை எழுந்ததை அறிவிக்கும்.
குழந்தை அடுத்தடுத்த பருவங்களில் அதாவது, தவழும்போது நடக்க தொடங்கும்போதும் குழந்தையின் கொலுசு சத்தம் கேட்பது அம்மாவுக்கு இனிய சங்கீதம் மட்டுமல்ல... குழந்தை எங்கே இருக்கிறது என்பதை அறிவிக்கும் மணியும் கூட.
கொலுசு ஓசை கேட்காவிட்டால் குழந்தை எங்கு சென்றுவிட்டதோ என்று அச்சம் கொள்வாளாம் அந்த குழந்தையின் அம்மா!
வாவ்! இனியாவது உங்க குழந்தை செல்வங்களுக்கு கொலுசு போடுவீங்கதானே!


பெற்றோரின் வசீகரம்!
குழந்தையை கொஞ்சுபவர்கள் அது அம்மா ஜாடை, அப்பா ஜாடை, மாமா ஜாடை என சொல்லி சொல்லி மகிழ்வர். லண்டனில் செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் "பெற்றோரின் வசீகரம், அழகு அவர்களின் வாரிசுகளில் மகன், மகள் யாருக்கு தொடரும்' என்ற ஆய்வை பேராசிரியர்கள் டேவிட் பெரட், எலிசபெத் கார்னவெல் ஆகியோர் செய்தனர்.

ஆய்வின் முடிவு...
குடும்பத்தில் மரபு வழியாக சில விஷயங்கள் ஒரே மாதிரியாக தொடரும். அந்த வகையில் ஒரு குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக தொடருவதில் வசீகரமும் ஒன்று. 
நூற்றுக்கணக்கான குடும்பங்களின் போட்டோ ஆல்பம் உடல் ரீதியான சில விஷயங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தோம். அதில் பல வித்தியாசமான தகவல்கள் கிடைத்தன. பல குடும்பங்களில் பெற்றோரின் வசீகரம், அழகு அவர்களின் மகள்களிடம் தொடர்வதை தான் காண முடிந்தது. அதே சமயம், அவர்களை போல, மகன்கள் அவ்வளவு வசீகரமாக இல்லை.
தாய், தந்தை இருவரிடத்தும் உள்ள வசீகரம் தான் மகள்களுக்கு முழுமையாக போய் சேருகிறது. ஆனால், மகன்களுக்கு முழுமையாக போய் சேருவதில்லை. இதற்கு மரபு ரீதியாக காரணங்கள் இருக்கலாம். அது பற்றி இன்னும் ஆராய வேண்டும். இதுபோல, புஜபலத்துடன் தந்தை இருந்தால், அவருக்கு அதே மாதிரி நல்ல ஆஜானுபாகுவான மகன்கள் வளருவர் என்பதும் எங்கள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


குழந்தையின் வலி- அலட்சியம் வேண்டாம்!
வயிற்றுவலி, தலைவலி, கால்வலி, இவற்றில் ஏதேனும் ஒன்று இருப்பதாக குழந்தை சொன்னால், "ஸ்கூலுக்கு மட்டம் போடறதுக்கு சாக்கா... எல்லா சரியாயிடும்' என்று அதட்டும் பெற்றோர்களே அதிகம்.
எல்லா நேரங்களிலும், எல்லா குழந்தைகளும் இப்படி படிப்பிலிருந்து தப்பிக்க மட்டுமே வலிகளை காரணம் காட்டுவதில்லை. அவர்களுக்கு நிஜமாகவே வலி இருக்கலாம். அந்த வலியின் பின்னணியில் பல காரணங்களும் இருக்கலாம்.
15 முதல் 20 சதவீத குழந்தைகள் நாள்பட்ட வலியில் அவதிப்படு கின்றனர். குழந்தைகளுக்கு வருகிற வலி, பெரியவர்களுக்கு வரும் வலியிருந்தும் வேறுபட்டது. காரணம் 5 வயதுக்குப்பட்ட குழந்தைகளால் வலி உணர்ச்சியை தெளிவாக சொல்ல முடியாது. வலியை தவிர மற்ற அறிகுறிகளே பிரதானமாக இருக்கும். வலியை கண்டுபிடிக்கிற முயற்சியில், பல மருத்துவர்களும் பல அறிவுரைகளை சொல்வதால் பெற்றோர் குழம்பியிருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் என்ன செய்தும் வலி நிற்கவில்லை என்கிறபோது எக்கசக்க மன அழுத்தத்துக்கு தள்ளப்படுகிறார்கள். 5 வயதுக்கு மேலான குழந்தைகளால்தான் வலியை ஓரளவு உணர்த்த முடியும். வலியினால் அவதிப்படுகிற குழந்தைகளிடம் வழக்கத்துக்கு மாறான எரிச்சல், சோர்வு, அமைதி போன்றவை காணபட்டாலோ, மூர்க்கத்தனம், தூக்கமின்மை, உணவு பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, செயல் திறனிலோ, கவனத்திலோ குறைவு உண்டானாலோ... அவற்றை வலிக்கான அறிகுறிகளாக கணக்கில் கொள்ளலாம். 
இந்த வலிகளுக்கு உடல்ரீதியான காரணங்கள் இருக்கலாம். அதாவது உடலுக்குள் உள்ள நோயின் விளைவாக வலி ஏற்படலாம். ரத்த சோகை, நுரையீரல் பிரச்னை, புற்றுநோய், உடல் சோர்வு நோய், சிறுநீர் பிரச்னை போன்றவற்றால் கூட வலி வரலாம்.
அடுத்து மனரீதியான மற்றும் சமூக ரீதியான காரணங்கள்... பள்ளியில் ஏற்படும் பிரச்னைகள், பெற்றோருடன் உண்டாகிற சண்டை, பிரிவு, மரணம், நெருங்கிய உறவினரின் பிரிவு, இடமாற்றம், பராமரிக்கிற நபர் மாறுதல் போன்ற பல விஷயங்கள்....
12 முதல் 14 வயது வரையிலான பிள்ளைகளுக்கே வலி அதிகமிருக்கிறது. இதில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். 30 சதவீதத்தினருக்கு முதுகு வலியும், 50 சதவீதத்தினருக்கு தலைவலியும் இருக்கிறது. வயிற்று வலி பரவலாக இருக்கிறது. வயிற்று வலிக்கு கிருமிகளோ, அப்பென்டிக்ஸ் எனப்படுகிற குடல்வால் பிரச்சனையோ காரணம் ஆகலாம். காலை உணவை தவிர்ப்பது, டென்ஷன் போன்றவற்றால் தலைவலி வரும்.
பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்துகள் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. வெறும் மாத்திரைகளால் மட்டுமே குணப்படுத்த கூடியதில்லை. குழந்தைகளின் வலிகள். அவர்களுக்கென தனி மருந்து முறைகளும், ஆலோசனைகளும் நிச்சயம் தேவை.
இனி உங்கள் குழந்தை வலிக்கிறது என்று சொன்னால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது!
Download As PDF

இயற்கை உணவே இனிய உணவு

முளை தானியம் என்னும் அற்புத உணவு! 
மனிதன் பிறந்ததே சாப்பிடத்தான் என்பது போல, இன்றைய தேதிக்கு சைவத்திலும், அசைவத்திலும் வித, விதமான உணவுகள் உலகமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆரோக்கிய கேடே மண்டிக் கிடக்கிறது.
போதாதற்கு நித்தமும் ஒரு புத்தம் புது உணவைக் கண்டுபிடித்து ஓட்டல்காரர்கள் வாழ்கின்றனர்; மக்கள் நோகின்றனர்.
இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.
இயற்கை உணவு என்பது ஏதோ ஒன்று அல்ல, எல்லாம் நமக்கு தெரிந்ததே.
பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான், முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி, 8 மணி நேரம் ஊற வைத்து, பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால், 8 - 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். (இப்போது இந்த வேலையைச் செய்யும், "ஸ்பிரவுட்ஸ் மேக்கர்' என்ற பிளாஸ்டிக் டப்பாக்கள் விற்கப்படுகின்றன). இப்படி தயாரான இந்த தானியத்துடன் விருப்பம் போல தேங்காய், வெல்லம், தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள் ஆகியவைகளை சேர்த்தோ, சேர்க்காமாலோ சாப்பிட வேண்டியதுதான்.
இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும், அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான, உன்னதமான உயிர் உணவு.

இதன் பயனை உணர்ந்து கொண்டால், கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும். இந்த முளை தானியத்தில் இருந்து முளை தானியக் கஞ்சி, சப்பாத்தி, தோசை, அடை போன்ற உணவுகளையும் தயாரித்து, சாப்பிடலாம்.
இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன், விட்டமின் ஏ, பி1, பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால், புற்றுநோய் மட்டுப்படும். முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால், ஒல்லியானவர்களுக்கு உடல் போடும், கண்பார்வை மேம்படும். முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம், தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் பருமன் குறையும், மூட்டுவலி தீரும்.இன்னும், இன்னும் இப்படி எத்தனையோ மகத்துவத்தை செய்யவல்லதுதான் முளைவிட்ட தானியங்கள்.
இப்படி நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல, எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு. இருந்தும் இந்த முளைவிட்ட தானியம் மக்களிடம் பிரபலமடையாத தற்கு காரணம், வேகமான உலகில் நாம் இருப்பதுதான். இதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஆனால், அதற்கு யாரும் தயாராக இல்லை. ஒரே வார்த்தைதான், நீங்கள் உங்கள் உடலின் நண்பன் என்றால் மெனக்கெடலாம். இல்லை, எதிரி என்றால் விருப்பம் போல இருந்து கொள்ளுங்கள்.

இந்த முளைவிட்ட தானியங்களின் அருமையை உணர்ந்த சிவகாசியைச் சேர்ந்த மாறன் என்பவர், இதை, மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை ஒரு லட்சியமாகவே கொண்டுள்ளார். ஒரு வேளை உணவாக சிறு, சிறு பாக்கெட்டுகளில் போட்டு, அதில் கூடுதல் சுவைக்காக நெல்லி, கேரட் போன்றவைகளை கலந்து வெறும், ஏழு ரூபாய்க்கு விற்று வருகிறார் .உங்கள் வீட்டு விசேஷம் என்றால் வித்தியாசமாக இந்த இயற்கை உணவை பரிமாறவும் இவர் தயார். அல்லது நேரில் வந்து இயற்கை உணவு பற்றி சொல்லுங்கள் என்று போன் போட்டு சொன்னாலும் (93674 21787) உங்கள் இருப்பிடத்திற்கே வந்து சொல்லித் தரவும் தயார். எப்படியா வது வரும் தலைமுறை இந்த இயற்கை உணவை சாப்பிட்டு, கொண்டு ஆரோக்கியமான தலைமுறையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். இது, அவருடைய லட்சியம் மட்டுமல்ல; நம்முடையதும்தான். 
Download As PDF

Friday, November 11, 2011

கைத்தொலைபேசிகளின் கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள




உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை பெறுவதற்கு கைத்தொலைபேசிகள் பயன்படுகின்றன. இதில் உள்ள வசதிகளால் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.
2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
நன்றி lankasri இணையம் . 
Download As PDF

Thursday, November 10, 2011

ஞாபக மறதியிலிருந்து விடுபடுவதற்கு


பலரையும் பாதிக்கும் பிரச்னை ஞாபக மறதி. சரியான காரணத்தை கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்
.
மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று நேரத்தை திட்டமிடாமை.
காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் டென்ஷனுடன் செய்வதால் மனம் நிம்மதியற்று போகிறது. இந்த சூழலில் சாதாரண விஷயங்கள் கூட எளிதில் மறந்து விடுகிறது. நேரத்தை திட்டமிடுவதன் மூலம் டென்ஷனில் இருந்து விடுபட முடியும்.
மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமான விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக்க மாற்றலாம். அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து நினைவுக்கு கொண்டு வர முடியும்.
மறதிக்கு இன்னொரு முக்கிய காரணம் கவனச்சிதறல். இதனால் முக்கிய விஷயங்கள் நினைவில் பதியாமல் போகிறது. ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்வது மற்றும் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாக கைவிட வேண்டும்.
இவர்கள் ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையில் முழு கவனம் வைப்பதன் மூலம் மறதியை தடுக்க முடியும். மறக்கும் பழக்கம் அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
நினைவாற்றல் பிரச்னை மூன்று வகைப்படும். முதலாவது குறுகிய கால நினைவாற்றல். பயன்படுத்திய தொலைபேசி எண்ணை உடனடியாக மறந்து விடுதல் இந்த வகை. அடுத்த வகை அண்மைக் கால நினைவாற்றல்.
இதில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்ததை நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். சிறு வயதில் நடந்த விஷயங்களை மறந்து விடுவது நீண்ட கால நினைவாற்றல் குறைபாடு.
ஞாபக மறதிக்கு பல காரணங்கள் உள்ளன. மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு மற்றும் தலையில் அடிபடுவதால் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
குடிப்பழக்கம், வலிப்பு, பார்வை குறைபாடு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கும் நினைவாற்றல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிகளுக்கு குறுகிய கால, அண்மைக் கால நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படலாம்.
நினைவாற்றல் பிரச்னையை பொதுவாக அல்சைமர் நோய் என்று அழைக்கிறோம். முதலில் அண்மை கால நினைவுகளை படிப்படியாக இழக்கின்றனர்.
புதிய தகவல்களை கற்பது மற்றும் நினைவில் வைத்து கொள்வதிலும் பிரச்னை ஏற்படும். ஒன்றையே திரும்பத் திரும்பக் கூறுவது, பொருட்களை இடம்மாற்றி வைத்து விட்டு தேடுவது போன்ற குழப்பங்கள் காணப்படும்.
தனி மனித ஆளுமை, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சமூக பழக்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படும். இதுபோன்ற காரணங்களால் பதற்றம், கடுப்பு, மனச்சோர்வு மற்றும் குழப்பம், அமைதியின்மை ஆகிய பிரச்னைகள் உண்டாகி நிம்மதியற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
இது போன்ற ஆரம்ப அறிகுறிகள் தெரியும் போதே சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். பாதுகாப்பு முறை: ஒரு குழந்தை லட்சக்கணக்கான மூளை செல்களுடன் பிறக்கிறது. மனிதனுக்கு வயதாகும்போது படிப்படியாக மூளை செல்களில் சில அழிகிறது. புதிதாக எதுவும் உருவாவதில்லை.
வயதாகும் போது மூளை செயல்பாட்டுக்கு தேவையான வேதிப் பொருட்கள் உடலில் சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால்தான் வயதாகும் போது நினைவாற்றல் பிரச்னை உருவாகிறது.
சிறு வயதில் இருந்தே பதற்றமான வாழ்க்கை சூழலை மாற்றி நேரத்தை திட்டமிட குழந்தைகளை பழக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற டென்ஷனை தவிர்க்கலாம்.
சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவை மனநிலையை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும். இதன் மூலம் நினைவாற்றல் பிரச்னையை தவிர்க்கலாம். நேரத்தையும் வேலையையும் திட்டமிடுவதன் மூலம் மறதிக்கான வாய்ப்பை குறைக்கலாம்.
அடுத்ததாக நினைவாற்றலை அதிகரிக்க பயிற்சி அளிக்கலாம். புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடலாம். எப்போதும் பரபரப்பாக இருப்பதை விடுத்து மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம்.
அந்த நேரங்களில் மறக்கும் விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதன் மூலம் முக்கியமான விஷயங்களை மனதில் பதிய வைக்கலாம். செய்ய வேண்டிய வேலை மற்றும் மறக்கும் விஷயம் குறித்து தாளில் எழுதி வைத்து நினைவுக்கு கொண்டுவரலாம். முக்கியமாக, மறதிக்காக கவலைப்பட கூடாது. இதனாலும் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
நன்றி - lankasri tehnology
Download As PDF

வாய்மொழிச் செய்திகளே பழமொழிகளாக ஆயின


மனித வாழ்வியலின் காலங்காலமாகப் பட்டுணர்ந்த பட்டறிவின் காரணமாகத் தோன்றியவையே பழமொழிகள். ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வில் பல்வேறு நேர்வுகளில் பலவித நிகழ்வுகளைச் சந்தித்திருப்பர். அந்நிகழ்வுகளில் நல்லதும் நடந்திருக்கும் கெட்டவையும் நடந்திருக்கும். அவற்றை உற்று நோக்கிச் சில காரணத்தால் ஏற்பட்டிருக்கும் என்று நம்பி உரைத்த வாய்மொழிச் செய்திகளே பழமொழிகளாக ஆயின.


நாட்டுப்புற வாய்மொழி இலக்கியக் கூறுகளுள் ஒன்றான
 பழமொழியை முதுமொழி எனத் தொல்காப்பியம்


"நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும் 
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முத்தற்கு வரும்
ஏது நுதலிய முதுமொழி என்ப"

என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். இன்றும் மலையாள மொழியில் பழமொழியைப் பழஞ்சொல் என்றே கூறுவதைக் காணலாம்.


"பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே யாகுதல் வாய்த்தமை தோழி"

என அகநானூறும்,

"நீ அறிந்திலையோ நெடுமொழி அன்றே"

எனச் சிலப்பதிகாரமும் எடுத்துரைக்கும் இலக்கிய மேற்கோள்கள். பழமொழியானது தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் அவர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற வகையில் கையாளப்பெற்று வருகின்றது.

தமிழகக் கிராமப்புறங்களில் இன்றைக்கும் பேச்சு வழக்கில் பல வகையான பழமொழிகள் கையாளப்பட்டு வருகின்றன. பேச்சு வழக்கில் இன்றைக்கும் பாமரமக்கள் மற்றும் படித்த மக்களால் பேசப்பட்டு வரும் பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளது இக்கட்டுரை.


பழமொழிகள் கையாளப் பெறும் சூழல்கள்:-
அனுபவத்தால் பிறக்கும் பழமொழிகள் அன்றாடப் பேச்சு வழக்கில், இன்ப நிகழ்வுகளின் போதும், துன்ப நிகழ்வுகளின் போதும், ஏசலாகவும், கேலியாகவும் அண்டை வீட்டாருடன் சண்டைகள் போடும்போதும், ஒருவரை ஒருவர் மறைமுகமாகச் (சாடை பேசுதல்) சாடுகின்றபோதும் பழமொழிகளைக் கையாளுகின்றனர். இவ்வகையில் பிறக்கும் பழமொழிகளை,
1. உவமையாக வரும் பழமொழிகள்.
2. உறவுகள் பற்றி வரும் பழமொழிகள்.
3. பொதுவாக வருவன.



1. உவமையாக வரும் பழமொழிகள்:-

1. ஒரே குட்டையில் ஊறிய மட்டைபோல.
2. கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் போல.
3. பார்த்தால் பசுப்போல், பாய்ந்தால் புலிபோல்.
4. எருமை மாட்டில் மழை பெய்தது போல.
5. இருதலைக் கொள்ளியின் ஓர் உயிர் போல.
6. தேன் எடுப்பவன் வீரல் சூப்புவது போல.
7. குப்பைமேடு கோபுரமானது போல.
8. குறைகுடம் கூத்தாடுவது போல.

2. உறவுகள் பற்றி வரும் பழமொழிகள்:-

1. பருவத்தே பயிர் செய்தல் வேண்டும்.
2. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.
3. மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி.
4. ஆடு பகை குட்டி உறவு.
5. நல்ல மாடு உள்ளுரில் விலைபோகும்.
6. பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்.
7. அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழி.
8. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.
9. நித்தம் நித்தம் வந்தால் நெய்யும் புளிக்கும் பலநாளும் வந்தால் பாலும் புளிக்கும்.
10. ஆகாத பொண்டாட்டி கால் பாட்டாலும் குத்தம் கைப்பட்டாலும் குத்தம்.
11. பொருள் ஒரு பக்கம் போக பொல்லாப்பு ஒரு பக்கம் வரும்.
12. பெட்டியிலே பூட்டினாலும் போட்ட விதி தப்பாது.
13. தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு.

இவை போன்று வரும் பழமொழிகள் உறவுகள் பற்றியும், உறவுகளால் வரும் துன்பங்கள் பற்றியும் கூறுவதாக அமைந்துள்ளன.

3. பொதுவான பழமொழிகள்

1. நாற்றில் வளையாதது மரத்தில் வளையாது.
2. நம்பினவனை நட்டாத்தில் விடுதல்.
3. சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான்.
4. தன் முதுகு தனக்குத் தெரியாது.
5. எலி வளையானாலும் தனிவளை வேண்டும்.
6. வல்லவனையும் வழுக்கும் வழுக்குப் பாறை.
7. குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப் போச்சு.
8. கோடி கோடியா வாழ்ந்தாலும் இறுதியில் ஒரு கோடிதான் மிச்சம்.
9. குவளையைக் கழுவினாலும் கவலையைக் கழுவ முடியாது.
10. உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்.
11. உழுகிறவர்கள் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.
12. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி.
13. மடியில கனம் இருந்தால் தான் விழியல பயம்.
14. சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
15. அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
16. ஈட்டி எட்டின வரைதான் பாயும் பணம் பாதாளம் வரையும் பாயும்.
17. ஏழையின் பேச்சு அம்பலம் ஏறாது.
18. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்.
19 பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
20. பேராசை பெரும் நட்டம்.
21. முழு பூசணிக்காயை சோத்துல மறைத்தல்.
22. ஆசை காட்டி மோசம் செய்தல்.
23. ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கவில்லை.
24. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.
25. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்.
26. இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பான்.
27. அவனே! அவனே! என்பதைவிடச் சிவனே! சிவனே! என்பது மேல்.
28. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இரு.
29. தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
30. தன் வினை தன்னைச் சுடும்.
31. நாய் நடுகடலுக்குப் போனாலும் நக்கித்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
32. ஓட்டச் சட்டியினாலும் கொழுக்கட்டை வெந்தா சரி.

இவை போன்று வரும் பழமொழிகள் பெண்களாலும், ஆண்களாலும், படித்தவர்களாலும், பாமர மக்களாலும் அவர்கள் இருக்கும் இடம் கருதியும் சூழலுக்குத் தக்கவாறும் கையாளப்படுகின்றன.

மேற்கூறப் பெற்றுள்ள பழமொழிகள் தமிழகத்தில் சில பகுதிகளில் வாழும் மக்கள் இன்றைக்கும் பேச்சு வழக்கில் பேசி வருகிறார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளன. 



மிக்க நன்றி செந்தில்குமார் ( facebook )  நண்பர் ....  
Download As PDF