Friday, May 04, 2012

ஹெல்த் டிப்ஸ்


உடல்நலம்தொடர்பான தகவல்கள்

Download As PDF

Wednesday, May 02, 2012

போகட்டும் புழுத்தொல்லை: யானை திப்பிலி


குடலில் புழுக்கள் தங்கி, குடலுறிஞ்சிகளில் ரத்தத்தை உறிஞ்சி, இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இவை நமது உணவை மலமாக மாறுவதற்கு உதவி புரிகின்றன. இவ்வாறு புழுக்கள் நமது செரிமான மண்டலத்திற்கும், உணவு கழிவு மண்டலத்திற்கும் பேருதவி புரிந்தாலும், அளவுக்கு மீறும் பொழுது, இந்த புழுக்கள் உடலில் பலவித உபாதைகளை ஏற்படுத்துகின்றன. வட்டப்புழுக்கள், உருண்டை புழுக்கள், தட்டைப்புழுக்கள், நாடாப்புழுக்கள் என பலவகையான புழுக்கள் நமது குடலில் வசிக்கின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் இனப்பெருக்கம் செய்து, ஒருவித நிலைத்தன்மையை ஏற்படுத்துகின்றன. ஆனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன.
இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும் கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு, வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல், சிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன. அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம்.
அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. பைப்பர் சாபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, பைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே, யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன. நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்ஸ் மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன. இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ் போ ன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன. யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.
Download As PDF

Tuesday, May 01, 2012

உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள்


உலகைத் தாங்குவது அன்பு
* அணுக்களிடையே இணைக்கும் சக்தி இருப்பதால்தான், உலகம்
பொடிப்பொடியாக உதிர்ந்துவிடாமல் இருப்பதாக விஞ்ஞானிகள்
கூறுகிறார்கள். அது போலவே, உயிர்களிடத்தும் அன்பு என்னும்
இணைக்கும் சக்தி இருக்க வேண்டும். அன்பு உள்ள இடத்திலேயே,
உயிர் இருக்கிறது. பகைமை அழிவையே தருகிறது. மனித ஜாதி
அழியாமல் ஜீவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், இணைக்கும்
சக்தியே. இது பிரிக்கும் சக்தியை விடப் பெரியது.
* உண்மை இன்றேல் அன்பும் இல்லை. உண்மை இல்லாமல் பாசம்
இருக்கலாம். உதாரணம், பிறர் கெடத் தான் வாழும் தேசபக்தி.
உண்மை இல்லாமல் மோகம் இருக்கலாம். எடுத்துக்காட்டு, ஓர்
இளம் பெண்ணிடம் ஒரு வாலிபன் கொள்ளும் காதல். உண்மை
இல்லாமல் வாஞ்சை இருக்கலாம். உதாரணமாக, பெற்றோர்
பிள்ளைகளிடம் காட்டும் அன்பு மிருகத்தன்மைக்கு
அப்பாற்பட்டது. அது ஒரு போதும் பாரபட்சமாய் இருக்காது.
உலகத்தை தாங்கி நிற்பது அன்பு ஒன்றே என்பது என் திடமான
நம்பிக்கை. அன்புள்ள இடமே வாழ்வுள்ள இடம். அன்பில்லா
வாழ்வு மரணமே.
* அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மீது தனக்கு அன்பு
இருக்கிறது என்பதை அவர்கள் நன்கு உணரும்படி ஒருவர் செய்ய
வேண்டும். தான் கூறும் முடிவு சரியானதாகவே இருக்கும் என்ற
நம்பிக்கை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட
வேண்டும். அதோடு தன்னுடைய முடிவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவோ,
அமலாக்கவோ இல்லையானால், அதனால் தனக்கு எந்தவிதமான
மனக்கஷ்டமும் ஏற்படாது என்பதும், நிச்சயமாக இருக்க
வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால்தான் குற்றம் குறைகளைக்
கூறிக் கடுமையாகக் கண்டிக்கும் உரிமையை ஒருவர்
பெற்றவராவார்.
அமைதி தரும் உண்ணாவிரதம்
* உண்ணாவிரதம் என்பது இன்று நேற்று உண்டான சாதனமன்று.
ஆதிபுருஷன் என கருதப்படும் ஆதாம் காலத்திலிருந்தே
அனுஷ்டிக்கப்பட்டு வருவது. அது தன்னைத் தானே
தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு பயன்பட்டிருக்கிறது. நல்ல
லட்சியங்களோ, தீய லட்சியங்களோ அவைகளை அடைவதற்கு
பயன்பட்டிருக்கிறது.
* உண்ணாவிரதம் என்பது அகிம்சை என்னும் ஆயுத சாலையில்
உள்ள ஆயுதங்களில் மிகவும் வலிமை வாய்ந்த ஆயுதமாகும். அதை
வெகு சிலரே உபயோகிக்க முடியும் என்பதால் அதை உபயோகிக்கவே
கூடாது என்று ஆட்சேபிக்க முடியாது.
* உண்ணாவிரதமெனும் ஆயுதத்தை உபயோகிப்பதற்குச் சரீரபலம்
மட்டும் போதாது. சத்தியாக்கிரக கடவுளிடத்தில் அசாத்திய
நம்பிக்கை தேவைப்படும்.
* நான் அனுஷ்டித்த உண்ணாவிரதங்களில் எதுவும் பலன்
தராமல் போனதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி நான் உண்ணாவிரதம்
அனுஷ்டித்த காலத்திலெல்லாம் அதிக உன்னதமான அமைதியும்,
அளவற்ற ஆனந்தமுமே அடைந்தேன்.
* அதிக பலனுள்ள சில மருந்துகளைப் போல உண்ணாவிரதமும்
அபூர்வமான சந்தர்ப்பங்களிலும், அதில் திறமையுடைவர்களின்
மேற்பார்வையிலும் தான் உபயோகிக்கக் கூடியதாகும்.
* உண்ணாவிரதத்தை உபயோகிக்கும் வித்தையில் திறமை உள்ளவன்
உபயோகித்தாலன்றி அது பலாத்காரமாகவே ஆகிவிடக்கூடும்.
* ஆண்டவன் அருளால் ஏற்படாத உண்ணாவிரதங்கள் அனைத்தும்
பயனற்ற வெறும் பட்டினியைவிடக் கூடக் கேவலமானதே ஆகும்.
* உண்ணாவிரதத்தால் ஏதேனும் நன்மை ஏற்படக்
கூடியதாயிருந்தாலும், அடிக்கடி நிகழ்த்தி வந்தால் எந்த
நன்மையும் ஏற்படாமல் போகும். இறுதியில் ஏளனமே
மிச்சமாகும்.
வார்த்தைகளற்ற இருதயம் வேண்டும்
பிரார்த்தனை மனிதனுடைய வாழ்க்கையின் உயிர்நாடியாகும்.
நமையே நாம் முழுமையாக உணர்ந்து கொள்வதே பிரார்த்தனை. அல்லது பரந்த
அர்த்தத்தில் உள்ளுக்குள் தொடர்பு கொள்வதும்
பிரார்த்தனையே. எப்படியிருந்தாலும் பலன் ஒன்றுதான்.
வேண்டிக் கொள்வதாக இருந்தால்கூட, ஆன்மாவைத்
தூய்மைப்படுத்தும் படியும், அதைச் சூழ்ந்துகொண்டுள்ள
அறியாமையையும், இருட்படலங்களையும் போக்கும்படியும்
வேண்டிக் கொள்வதாகவே இருக்க வேண்டும். தன்னிடமுள்ள
தெய்வீகத் தன்மை விழிப்படைய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன்,
பிரார்த்தனையின் உதவியை நாடித்தான் தீரவேண்டும். வெறும்
சொற்களின் அலங்காரமோ அல்லது காதுகளுக்குப் பயிற்சி
அளிப்பதோ பிரார்த்தனை அல்ல. அர்த்தமற்ற சூத்திரத்தைத்
திரும்பத் திரும்பக் கூறுவதும் பிரார்த்தனை அல்ல.
ராமநாமத்தை எத்தனை தடவைகள் திரும்பத் திரும்பக்
கூறினாலும் அது ஆன்மாவைக் கிளறவில்லையாயின், அது
வீணேயாகும். இருதயமற்ற வார்த்தைகளைக் காட்டிலும்,
வார்த்தைகளற்ற இருதயமே பிரார்த்தனைக்குச் சிறந்தது.
பசியுள்ள மனிதன் நல்ல உணவை மனதார ருசிப்பதுபோல, பசியுள்ள
ஆன்மா மனமார்ந்த பிரார்த்தனையை ருசித்து அனுபவிக்கும்.
பிரார்த்தனையின் மந்திர சக்தியை அனுபவித்தவன்
சேர்ந்தாற்போல் நாட்கணக்கில் உணவின்றி வாழமுடியும். ஆனால்,
பிரார்த்தனையின்றி ஒரு விநாடி கூட வாழமுடியாது. ஏனெனில்
பிரார்த்தனையின்றேல், உள்ளத்தில் அமைதி இருக்க முடியாது.
எனது அனுபவத்தையும், எனது சகாக்களின் அனுபவத்தையுமே
இப்போது நான் கூறியுள்ளேன்.
Download As PDF

ஸ்பைசி வெஜிடபிள்


பிரைட் ரைஸ், நூடுல்ஸ், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றுக்கு சுவையான சைடு டிஷ் தேவை. அதற்கு ஸ்பைசி வெஜிடபிள் தயாரித்துக் கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
தேவையானவை:
காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர் சேர்த்து-1/4 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள்- 1 டேபிள் ஸ்பூன்
சோளமாவு-ஒரு டேபிள் ஸ்பூன்
மைதா மாவு-ஒரு டேபிள் ஸ்பூன்
வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்
அஜினோமோட்டோ- 1 சிட்டிகை
தக்காளி கெச்சப்- 1 டீஸ்பூன்
லெமன் ஜூஸ்- 1/4 டீஸ்பூன்
எண்ணைய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு
உப்பு-தேவைக்கேற்ப
செய்முறை:
காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி தேவையான உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதா மாவு தூவிப் பிசிறி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், அஜினோமோட்டா, தக்காளி கெச்சப் சேர்த்து கிளறவும். தேவையான உப்பு சேர்த்து கிளறி அத்துடன் வெண்ணைய் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் பொரித்த காய்கறிகளைச் சேர்த்து புரட்டி கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி விடவும். மொறுமொறுவென நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த சைடு டிஷ்சை மாலை நேர சிற்றுண்டியாகக் கூட செய்து சாப்பிடலாம்.
Download As PDF