Saturday, February 08, 2014

தேங்காய் நல்லதா, கெட்டதா

தேங்காய் நல்லதா, கெட்டதா என்பதில் பலருக்கும் பலவிதக் கருத்துகளும் கேள்விகளும் உண்டு. கேரளா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தேங்காய் இல்லாமல் சமையல் ருசிப்பதே இல்லை. சாம்பாரோ, ரசமோ, கூட்டோ, பொரியலோ, வேறு எந்த உணவோ... அதில் பிரதானமாக இடம் பெறுவது தேங்காய். அவர்களுடன் ஒப்பிடும் போது, நம்மூரில் தேங்காயின் உபயோகம் சற்று குறைவுதான். அதிக தேங்காய் ஆபத்தானது என்று அதைத் தவிர்ப்பவர்கள் ஒரு பக்கம்... 

Posted Image

‘கேரளாலயும் இலங்கைலயும் தேங்காய் சாப்பிடறவங்க எல்லாம் வியாதிக்காரங்களாகவா இருக்காங்க? அதெல்லாம் ஒண்ணும் செய்யாது’ என்று அதைச் சேர்த்துக் கொள்கிறவர்கள் இன்னொரு பக்கம்... உண்மையில் தேங்காய் நல்லதா? கெட்டதா?

தேங்காயில் என்ன இருக்கிறது?


(100 கிராமில்) புரதம்  (கிராம்) கொழுப்பு (கிராம்) ஆற்றல் (கிலோ கலோரி)

வழுக்கை 0.9 1.4 41
கொப்பரை 7.1 64.4 672
தேங்காய் 20.9 13.3 360
டெசிக்கேட்டட் தேங்காய்
(பதப்படுத்தப்பட்டது ) 6.3 57.4 618
இளநீர் 0.14 0.13 19
தேங்காய்ப் பால் 0.8 7.2 76

தேங்காயை சமையலில் உபயோகிப்பதில் தவறே இல்லை. அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. தினசரி 30 முதல் 40 கிராம் தேங்காயை உபயோகிக்கலாம். அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்னையில்லை. துருவி, பால் எடுத்துக் கொதிக்க வைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக்கிறது. அதே மாதிரிதான் கொப்பரையும். சில வகை உணவுகள் கொப்பரை சேர்ப்பதால் கூடுதலாக ருசிப்பதுண்டு.

அந்தக் கொப்பரைதான் கெடுதலே. தேங்காய் முற்றி கொப்பரையாகும் போது, அதிலுள்ள நல்ல தன்மைகள் மாறி, கொழுப்பு கூடுகிறது. கூடிய வரை கொப்பரையை சமையலில் சேர்க்காமலிருப்பதே நலம். மற்றபடி சமைக்காத தேங்காயானது எல்லோருக்குமே நல்லதுதான். கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் மட்டும் தேங்காயைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. தேங்காயை பால் எடுத்து உபயோகிக்கிற போது, அதிலுள்ள நார்ச்சத்தை எடுத்து விடுகிறோம்.

வெறும் கொழுப்பு மட்டுமே மிஞ்சியிருக்கும். தேங்காய்க்கு வயிற்றுப்புண்களை ஆற்றும் சக்தி உண்டு. அதனால்தான் வாயில் புண் வந்தால்கூட, தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடச் சொல்வார்கள். அதன் பால் புண்ணில் பட்டால், சீக்கிரமே ஆறும். அல்சர் நோயாளிகளுக்கும் தேங்காய் பால் சேர்த்த உணவுகளை அதிகம் பரிந்துரைப்பதன் பின்னணியும் இதுதான்.


தேங்காய் ஏன் கூடாது?

சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் எனப்படுகிற கெட்ட கொழுப்பு அதில் அதிகம் என்பதே காரணம். கொப்பரை மற்றும் சமைத்த தேங்காயில் இது அதிகம். மற்றபடி குழந்தைகளுக்கு புரதம் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க வேண்டும் என்கிற நிலையில், தேங்காய் சேர்த்த பர்பி, தேங்காயும் வெல்லமும் சேர்த்த இனிப்புகளும் அதிகம் தரலாம்.

எடை குறைவான குழந்தைகளுக்கு கொப்பரையில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் கலோரி உதவும். அவர்களுக்கு கொப்பரையில் செய்த பொடி, கொப்பரை மிக்சர் போன்றவற்றை அடிக்கடி கொடுக்கலாம். கொப்பரைத் துருவல், காய்ந்த மிளகாய், உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும். எடை குறைவான குழந்தைகளுக்கு சூடான சாதத்தில் இந்தப் பொடி சேர்த்துப் பிசைந்து கொடுத்தால், உடல் பூசின வாகு பெறும்.

தேங்காயே சேர்க்கக் கூடாது என்பவர்களுக்குக்கூட மருத்துவர்களும் உணவு ஆலோசகர்களும் இளநீர் எடுத்துக் கொள்ளச் சொல்வதுண்டு. இளநீர் அத்தனை இதமான ஒரு உணவு. வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, உடலிலுள்ள நீர் சத்தெல்லாம் வறண்டு, மருத்துவமனையில் சேர்கிற அளவுக்கு மோசமான உடல்நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு இளநீர் கொடுத்தால் போதும்... இன்ஸ்டன்ட் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ளும்.

இளநீரில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவு வேறெந்த உணவிலும் இல்லாத அளவுக்கு அபரிமிதமானது. இதய நோயாளிகளுக்கு இளநீர் பரிந்துரைக்கப்படும். அவர்களுக்குத் தேவையான சுத்தமான பொட்டாசியம் இளநீரில் மட்டும்தான் கிடைக்கும். அதுவே அவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு இருந்தால், இளநீர் கொடுக்கக் கூடாது. அப்படி மீறிக் கொடுத்தால், அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

காலையில் இளநீர்?

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் நல்லது என்கிற தவறான அபிப்ராயம் நிறைய பேருக்கு உண்டு. அதைத் தவிர்த்து, காலை உணவுக்கும், மதிய உணவுக்குமான இடைவெளியில் இளநீர் குடிப்பதே சிறந்தது. வெறும் வயிற்றில் குடிப்பதால், அதில் உள்ள சிறிதளவு கார்போஹைட்ரேட்கூட, நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தலாம். இளநீர் குடிப்பதால் உடல் சூடு தணியும். அதிலுள்ள கனிமங்கள் உடலுக்கு நல்லது.

விளையாட்டு வீரர்கள், தீவிர உடற்பயிற்சியாளர்கள் போன்றோர், விளையாடி முடித்ததும், பயிற்சி முடித்ததும் உடனே இளநீர் குடித்தால், இன்ஸ்டன்ட்டாக சக்தியைப் பெறுவார்கள். டயட் செய்கிறவர்கள், எப்போதும் களைப்பாகவே உணர்கிறவர்களுக்கும் இளநீர் அருமையான உணவு. தினம் ஒரு இளநீர் குடிக்கிறவர்கள் என்றும் இளமையாகவே காட்சியளிப்பார்கள். வெளியில் செல்கிற போது, தாகத்துக்கு ஏரியேட்டட் குளிர்பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்து, இளநீர் குடிக்கிற பழக்கத்துக்கு மாறலாம்.
Download As PDF

Tuesday, February 04, 2014

உருளைக்கிழங்கு சாதம் செய்முறை



தேவையானப் பொருட்கள்:

அரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
காய்ந்தமிளகாய் - 2
தனியா விதை - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு - 5
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நெய் - 1 டீஸ்பூன்


செய்முறை:
அரிசியை வேகவைத்து, சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை விட்டு, தனியா, பருப்புகள், மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து எடுத்து, ஆறியவுடன், உப்பையும் சேர்த்துப் பொடி செய்துக் கொள்ளவும்.

அதே வாணலியில், மீதி எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், முந்திரிப்பருப்பைச் சேர்த்து சிறிது வறுக்கவும். பின் கறிவேப்பிலைப் போட்டு வதக்கவும். அதன் பின் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போடவும். அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு, வறுத்து அரைத்த பொடி சேர்க்கவும். நன்றாகக் கிளறி விடவும். கடைசியில் சாதத்தைப் போட்டு, அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய்யையும் விட்டு, மீண்டும் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.
Download As PDF

Monday, February 03, 2014

கறிவேப்பிலை சாதம் செய்முறை



தேவையானப் பொருட்கள்:

அரிசி - 2 கப்
கறிவேப்பிலை - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு 

செய்முறை:

அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, பெருங்காயம், கடலைப்பருப்பு, மிளகாய் அகியவற்றை சிவக்க வறுக்கவும். பின் அதில் மிளகு சேர்த்து, சிறிது வறுத்து, அதில் கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின் தேங்காய் துருவலைச் சேர்த்து சிறிது வதக்கி, இறக்கி வைக்கவும். ஆறியபின், மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய்யை விட்டு, கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், முந்திரிப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவிப் போடவும். பின் சாதத்தைப் போட்டு லேசாகக் கிளறவும். கறிவேப்பிலைப்பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
Download As PDF

தேங்காய் சாதம் செய்முறை



தேவையானப் பொருட்கள்:
அரிசி - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
தேங்காய் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு 

செய்முறை:
அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் சாதத்தைக் கொட்டி, சிறிது தேங்காய் எண்ணையை அதன் மேல் விட்டு பரப்பி விடவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கடலைப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் முந்திரிப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் (நறுக்கியது), கறிவேப்பிலைச் சேர்த்து, சிறிது வறுக்கவும். பின்னர் அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, ஓரிரு வினாடிகள் வத‌க்கி, உப்பு சேர்த்து இறக்கி வைத்து, அதில் சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.

குறிப்பு: இதில் வேர்க்கடலை, சிறிது இஞ்சி ஆகியவற்றையும் சேர்க்கலாம். தாளிப்பதற்கு, எந்த எண்ணையையும் உபயோகப்படுத்தலாம். ஆனால், தேங்காய் எண்ணையில் தாளித்தால்தான் உரிய சுவை கிடைக்கும்.
Download As PDF

குடமிளகாய் சாதம்



தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
குடமிளகாய் - 1
கொண்டைகடலை - 1/4 கப்
வெங்காயம் - 1
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 4 முதல் 5 டீஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


வறுத்து பொடிக்க:

காய்ந்தமிளகாய் - 2
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
இலவங்கபட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 1

செய்முறை:
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே (அல்லது குறைந்தது 8 மணி நேரம்) ஊற வைக்கவும்.

ஊறிய கடலை நன்றாகக் கழுவி, அத்துடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து குக்கரில் மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து வைக்கவும்.

வறுக்கக கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு டீஸ்பூன் எண்ணையில் சிவக்க வறுத்தெடுத்து, சற்று ஆறியவுடன், நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

அரிசியை குழையாமல், உதிரியாக வேக வைத்தெடுக்கவும். சாதத்தை ஒரு தட்டில் கொட்டி அதன் மேல் ஓரிரண்டு டீஸ்பூன் எண்ணையை தெளிக்கவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் குடமிளகாய் துண்டுகளைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். அதன் பின், அதில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலை மற்றும் உப்பு போட்டுக் கிளறி விடவும். கடைசியில் சாதத்தைப் போட்டுக் கிளறி, அத்துடன் வறுத்து பொடித்து வைத்துள்ளப் பொடியை அதன் மேல் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.


குறிப்பு: கொண்டைக்கடலை சேர்க்க நேரமில்லையென்றால், அதற்கு பதில் தாளிப்பில் வேர்க்கடலையோ அல்லது முந்திரி பருப்போ சேர்த்து செய்யலாம். அல்லது எந்தவிதக் கடலையும் சேர்க்காமலும் செய்யலாம். கடலை வகைகளைச் சேர்த்தால் சுவை சற்றுக் கூடும்.
Download As PDF

Sunday, February 02, 2014

மிளகு சாதம்



தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


செய்முறை:
அரிசியைக் கழுவி தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி எடுக்கவும். சற்று ஆறியவுடன், வறுத்த பருப்புகள், தேங்காய்த்துருவல் அனைதையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்தெடுக்கவும்.

மிளகை சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

இன்னொரு வாணலில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். அதில் மிளகுப்பொடியையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் சாதத்தைச் சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள பருப்பு/தேங்காய்ப் பொடி, உப்பு ஆகியவற்றையும் சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

அப்பளத்துடன் பரிமாறவும்.
Download As PDF

கொத்துமல்லி சாதம் செய்முறை



தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
பச்சை கொத்துமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புளி - ஒரு சிறு நெல்லிக்காயளவு
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியைக் கழுவி தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். இஞ்சியையும் துண்டுகளாக நறுக்கிப் போட்டு வதக்கவும். பின் அதில் புளியைப் போட்டு சற்று வதக்கவும். கடைசியில் கொத்துமல்லியை நறுக்கிப்போட்டு சில வினாடிகள் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

வாணலியில் மீதி எண்ணையை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், முந்திரிப்பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். அத்துடன் சாதம், உப்பு, கொத்துமல்லி விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Download As PDF

மாங்காய் சாதம் செய்முறை


தேவையானப்பொருட்கள்:

சாதம் - 2 கப்
மாங்காய்த்துருவல் - 1 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 4 முதல் 5 டீஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
  

செய்முறை: 

ஒரு பச்சை மாங்காயை எடுத்து, தோல் சீவி துருவிக் கொள்ளவும். மாங்காய் துருவல் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். (புளிப்புத்தன்மை மற்றும் அவரவர் ருசிக்கேற்ப மாங்காய்த்துருவலை சற்று கூட்டி அல்லது குறைத்துக் கொள்ளலாம்).
 
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும்.  எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப்போடவும்.  காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும்.  கறிவேப்பிலையையும் போடவும்.  பின்னர் அத்துடன் மாங்காய்த்துருவல், மஞ்சள் தூள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை, அடுப்பை  சிறு தீயில் வைத்து வதக்கவும்.  கடைசியில் உப்பு போட்டுக் கிளறி விட்டு, சாதத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறி எடுக்கவும்.
 
பின்குறிப்பு: மாங்காயை துருவி சேர்ப்பதற்குப் பதிலாக, அரைத்தும் சேர்க்கலாம்.
Download As PDF

கோவைக்காய் சாதம்


தேவையானப்பொருட்கள்:

சாதம் - 1 கிண்ணம் (இருவர் சாப்பிடும் அளவிற்கு)
கோவைக்காய் - 10 முதல் 15 வரை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
  

வறுத்து பொடிக்க: 
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2
கெட்டி பெருங்காயம் - ஒரு சிறு மிளகு அளவு (தூளாக இருந்தால் - ஒரு சிட்டிகை)
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்

  
தாளிக்க: 

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
  

செய்முறை: 

கோவைக்காயை நன்றாகக் கழுவி விட்டு, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். தோசைக்கல் அல்லது அகலமான தாவாவை அடுப்பிலேற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள காயை, தனித்தனியாக பரப்பி வைக்கவும். அதன் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு, அவ்வப்பொழுது திருப்பி விட்டு சிவக்க வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். (மைக்ரோவேவ் அவனிலும் வதக்கி எடுக்கலாம்).
 
வெறும் வாணலியில் வெள்ளை எள்ளைப் போட்டு சிவக்கும் வரை அல்லது பொரிய ஆரம்பிக்கும் வரை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.  அதே வாணலியில் சிறிது எண்ணை விட்டு அதில் பெருங்காயம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப்போட்டு சிவக்க வறுத்தெடுத்து ஆற விடவும்.
 
ஆறியதும், அத்துடன் வறுத்து வைத்துள்ள எள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
 
ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சற்று வறுக்கவும்.  பின் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப்போடவும்.  கறிவேப்பிலையையும் போட்டு சற்று வறுத்து, அதன் பின் வதக்கி வைத்துள்ள கோவைக்காய் துண்டுகள், மஞ்சள் தூள்,  ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும்.  பின்னர் அதில் சாதத்தைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கிளறி விடவும். கடைசியில் பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவி, ஒரு டீஸ்பூன் எண்ணையையும் விட்டு நன்றாகக் கலந்து இறக்கி வைக்கவும்.

தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
Download As PDF

Saturday, February 01, 2014

உளுந்து சாதம்



தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
முழு உளுந்து - 1/4 கப்
பூண்டு பற்கள் - 10 முதல் 15 வரை
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிபப்ருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:
வெறும் வாணலியில் அரிசியையும், உளுந்தையும்,  நிறம் மாறாமல், தொட்டால் சுடும் அளவிற்கு வறுத்தெடுக்கவும்.

ஒரு குக்கரில், வறுத்த அரிசி, உளுந்து, பூண்டு, வெந்தயம், உப்பு ஆகியவற்றைப் போட்டு, அத்துடன் இரண்டரைக் கப் தண்ணீரைச் சேர்த்து, மூடி, 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டெடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் சீரகம், பெருங்காயத்தூள், முந்திரி, கறிவேப்பிலை சேர்க்கவும்.  சீரகம் பொரிந்ததும், தேங்காய்த்துருவலைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும்.  பின்னர் அதில் வேக வைத்துள்ள அரிசிக் கலவையைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

குறிப்பு:  புழுங்கலரிசி மற்றும் கறுப்பு உளுந்தை உபயோகித்துத்தான் இந்த சாதத்தை செய்வார்கள்.  இடுப்பெலும்பிற்கு வலு சேர்க்கக் கூடியது.  இதைத் தாளிக்காமல், சிறிது நல்லெண்ணை சேர்த்து அப்படியேவும் சாப்பிடலாம்.

Download As PDF

தக்காளி சாதம் - இரண்டாம் வகை



இந்த சாதம், பூண்டு, வெங்காயம் சேர்க்காமல், அதிக காரமில்லாமல், விரைவில் செய்யக்கூடிய ஒன்று. விரதம் மற்றும் பண்டிகை நாட்களுக்கு ஏற்றது.

தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
தக்காளி (நடுத்தர அளவு) - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


தாளிக்க:
நெய் அல்லது எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 5 அல்லது 6

செய்முறை:
தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 முதல் 6 விசில் வரும் வரை வேக விடவும்.

சிறிது நேரம் கழித்து, குக்கரைத் திறந்து, நன்றாகக் கிளறி விடவும்.

ஒரு சிறு வாணலியில் நெய் அல்லது எண்ணையை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், சீரகம், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து சாதத்தில் கொட்டிக் கிளறவும்.

சூடாக அப்பளம், சிப்ஸ் போன்றவற்றுடன் பரிமாறவும்.
Download As PDF

தக்காளி சாதம் - முதல் வகை



தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - 1" துண்டு
பூண்டுப்பற்கள் - 4
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை இலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்


செய்முறை:

அரிசியைக் கழுவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இலேசாகக் கீறி வைக்கவும்.

முழு தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், பாத்திரத்தை மூடி வைத்து, அடுப்பை அணைத்து விடவும். சற்று நேரம் கழித்து, தக்காளியை எடுத்து அதன் தோலை உரித்து விட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அரைத்த தக்காளிச் சாற்றுடன் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து 4 கப் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பிலேற்றி அதில் எண்ணையை விடவும். எண்ணை காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பட்டை இலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வறுத்து, பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று மினுமினுப்பாக வதங்கியவுடன், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும். பின்னர் அதில் ஊற வைத்துள்ள அரிசியை, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு சேர்க்கவும். அரிசியைத் தொட்டால் சுடும் அளவிற்கு வரும் வரை கவனமாகக் கிளறி விடவும். பின்னர் அதில் தக்காளிச் சாற்றையும், எலுமிச்சம் சாற்றையும் சேர்த்துக் கிளறி மூடி போட்டு 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக விட்டு, குக்கர் ஆறியதும், திறந்து கவனமாகக் கிளறி விடவும்.

விருப்பப்பட்டால், கொத்துமல்லித்தழையைத் தூவி அலங்கரிக்கலாம்.

வறுத்த முந்திரிப்பருப்பு, வேக வைத்தப் பட்டாணி 
ஆகியவற்றையும் இத்துடன் கலந்துப் பரிமாறலாம்.
Download As PDF

பூண்டு சாதம்


தேவையானப்பொருட்கள்:

சாதம் - 2 கப் (இருவருக்கு தேவையான அளவு)
பூண்டு பற்கள் (சிறிய அளவு) - 10 முதல் 15 வரை
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


செய்முறை:

ஒரு சிறு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். கடைசியில் 4 அல்லது 4 பூண்டு பற்களைப் போட்டு சற்று வதக்கி எடுத்து ஆற விடவும். ஆறிய பின், வறுத்த அனைத்தையும் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு அதில் மீதமுள்ள பூண்டுப்பற்களைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.  அதே எண்ணையில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.  அடுப்பை தணித்து வைத்துக் கொண்டு, சாதம் மற்றும் பொடித்து வைத்துள்ளப் பொடி, உப்பு  ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும்.  கடைசியில் வதக்கி வைத்துள்ளப் பூண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

வெள்ளரிக்காய் பச்சடியுடன் பரிமாறவும்.

கவனிக்க: எண்ணைக்கு பதில் சிறிது நெய்யிலும் பூண்டை வதக்கி போடலாம். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பிற்குப் பதிலாக, பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றைப் பொடித்தும் சேர்க்கலாம். பொட்டுக்கடலை/வேர்க்கடலை சேர்ப்பதென்றால் வறுக்கத் தேவையில்லை.
Download As PDF

Friday, January 31, 2014

லட்டு செய்வது எப்பெடி

திருப்பதி என்ற பெயரை கேட்டாலே எல்லோருக்கும் லட்டுதான் ஞாபகத்து வரும். அந்த அளவுக்கு பிரபலமான ஒரு இனிப்பு வகை என்று கூட சொல்லலாம். சுவை அணைவருக்கும் பிடித்த சுவையானதாகவே லட்டு இருக்கிறது. நீங்களும் உங்க வீட்டில் லட்டு செய்து சுவைக்க விருப்பமா, இதோ செய்து உங்கள் உறவுகளுக்கும் கொடுத்து கொண்டாடி மகிழுங்கள்!

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கிலோ

சர்க்கரை – 1-1/4 கிலோ

முந்திரி – 15

விதையில்லா திராட்சை – 10

சோடா – 1 சிட்டிகை

கற்கண்டு – 10 கிராம்

பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை

எண்ணெய் – வறுப்பதற்கு

குங்குமப்பூ – 1 சிட்டிகை

ஏலக்காய் – 5

செய்முறை:


மாவு, சோடா, நீர் சேர்த்து மாவு போல் கரைத்து சூடான எண்ணெயில் ஜார்னியின் மூலமாக விழ வைத்து வறுத்து எடுத்து பூந்தி செய்யவும்.

சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க வைத்து சர்க்கரை சிரப் செய்யவும்.

இந்த சிரப்பில் ஒரு சிட்டிகை கேசரிப்பவுடர் சேர்க்கவும்.

பூந்திகளை அந்த சர்க்கரை சிரப்பில் போட்டு நன்கு கலக்கவும்.

முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து இந்த கலவையில் சேர்க்கவும்.

ஏலக்காய் பவுடர் விதையில்லா திராட்சை சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த கலவையானது கையில் பிடிக்கும் அளவிற்கு சூடு குறைந்து விடும். இப்பொழுது சீரான உருண்டைகளாக கையில் இலேசாக அழுத்தி பிடிக்கவும். ஆற விடவும்.


குறிப்பு:
சர்க்கரை சிரப் சூடாக இருக்கும் போது சிரப்பில் பூந்தியை சேர்க்கவும். 
Download As PDF

Tuesday, January 28, 2014

புதினா சாதம்



தேவையானப்பொருட்கள்:

அரிசி - 2 கப்
தேங்காய் பால் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:

புதினா இலை - 2 கப்
கொத்துமல்லி இலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி - 1" துண்டு
பூண்டு பற்கள் - 2


தாளிக்க:

எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 2
முழு ஏலக்காய் - 2
பட்டை இலை - சிறு துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்


செய்முறை:
அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற விடவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பிரஷ்ஷர் குக்கரில் எண்ணையை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பட்டை இலை, சோம்பு அக்கியவற்றைப் போட்டு சற்று வறுக்கவும். பின் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள புதினா விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் அதில் அரிசியை தண்ணீரை நன்றாக வடித்து விட்டு போடவும். அத்துடன் தேங்காய் பால், மூன்று கப் தண்ணீர் (தேங்காய் பால் மற்றும் தண்ணீர் இரண்டும் சேர்ந்து 4 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.) விட்டு கிளறி விடவும். மூடி வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக விட்டு இறக்கி வைக்கவும்.

சற்று ஆறிய பின் குக்கரைத் திற்ந்து, எலுமிச்சம் சாறு சேர்த்து கிளறவும்.

அதன் மேல் சிறிது புதினா இலைகள் மற்றும், எலுமிச்சம் பழத்துண்டுகளை வைத்து பரிமாறவும்.

குறிப்பு: இதை பாசுமதி அரிசியிலும் செய்யலாம். எண்ணைக்குப் பதில் நெய்யையும் சேர்க்கலாம். தேங்காய்பால் சேர்க்காமல், வெறும் தண்ணீரிலும் செய்யலாம்.

குருமாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

ன்றி அடுப்பங்கரை இணையம் ...
Download As PDF

எலுமிச்சம்பழ சாதம்



தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
எலுமிச்சம் பழம் - 2
சிவப்பு அல்லது பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பச்சரிசியைக் கழுவி, குழைய விடாமல் சாதமாக வேக வைத்தெடுக்கவும். ஒரு தட்டிலோ அல்லது வாயகன்ற பாத்திரத்திலோக் கொட்டி பரப்பி விடவும். அதன் மேல் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் எண்ணையை தெளிக்கவும்.

எலுமிச்சம் பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்தெடுத்துக் கொள்ளவும். அதில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுக்கவும். பின் அத்துடன் முந்திரிப்பருப்பு, மிளகாய் (ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும்), பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சற்று வதக்கி, எலுமிச்சை சாற்றில் கொட்டவும். இத்துடன் ஆற வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து கவனமாகக் கிளறவும்.

குறிப்பு: நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதானால், தாளிப்பிலேயே மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதிலேயே சாதத்தையும் கொட்டி சிறு தீயில் வைத்து, ஓரிரு நிமிடங்கள் கிளறி விட்டு, கீழெ இறக்கி வைக்குமுன், எலுமிச்சைச் சாற்றை சேர்த்து கிளறி, இறக்கி வைக்கவும்.

கொத்துமல்லித்தழை மற்றும் சிறிதாக நறுக்கிய காரட் துண்டுகளைத் தூவி அலங்கரிக்கலாம்.

ன்றி அடுப்பங்கரை இணையம் ....
Download As PDF

புளிச்சாதம்


தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
புளி - எலுமிச்சம் பழ அளவு
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி விதை - 1 டீஸ்பூன்
நல்லெண்ணை - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியைக் கழுவி குழையாமல், பொல பொலவென்று சாதமாக வேக வைத்தெடுத்து, ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும். அதன் மேல் ஓரிரு டீஸ்பூன் எண்ணையை தெளித்து விடவும்.

புளியையும் உப்பையும் ஊறவைத்து, திக்காக பிழிந்தெடுக்கவும். 2 கப் புளித்தண்ணீர் கிடைக்கும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். பின் அதில் வேர்க்கடலை, மிளகாய் (மிளகாயை 4 அல்லது 5 துண்டுகளாகக் கிள்ளிப் போடவும்), கறிவேப்பிலைச் சேர்த்து சற்று வதக்கி அத்துடன் புளித்தண்ணீரை ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், பெருங்காய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இதனிடையே, இன்னொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் ஒரு காய்ந்த மிளகாய், கொத்துமல்லி விதை மற்றும் வெந்தயத்தை வறுத்தெடுத்து, ஆறியவுடன் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

புளிக்கரைசல் நன்றாகக் கொதித்து சற்று திக்கானதும், பொடித்து வைத்துள்ள வெந்தய-தனியாப் பொடியைச் சேர்த்துக் கிளறி விடவும். புளிக்காய்ச்சல் கெட்டியாகி, எண்ணை மேலே மிதந்து வரும் பொழுது, இறக்கி விடவும்.

இந்தப் புளிக்காய்ச்சலை சாதத்தின் மேல் சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்து விடவும். கலக்கும் பொழுது தேவைப்பட்டால் மேலும் சிறிது எண்ணை விட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு: இதில் மற்ற எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் புளிச்சாதத்திற்கு நல்லெண்ணை சேர்த்தால்தான் வாசமாக இருக்கும். இதில் வேக வைத்த கறுப்பு கொண்டைக்கடலையையும் புளிக்காய்ச்சல் கொதிக்கும் பொழுது சேர்த்து செய்யலாம்.

நன்றி அடுப்பங்கரை இணையம் ....
Download As PDF

Sunday, January 19, 2014

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா



தேவையானப்பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
பச்சை பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


அரைக்க:
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 2 அல்லது 3
பூண்டுப்பற்கள் - 2
இஞ்சி - 1" துண்டு
பச்சை மிளகாய் - 1 அல்லது 2

தாளிக்க:
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 2

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பட்டாணியையும் வேக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், கசகசா, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றைப் போடவும். சோம்பு சற்று சிவந்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் வத்ங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து அத்துடன் உப்பு மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக மசிந்தவுடன் சாம்பாரி பொடியைச் சேர்த்து கிளறவும். பின்னர் அதில் உருளைக் கிழங்கு, பட்டாணியைச் சேர்த்து கிளறி விடவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து பிரட்டி விடவும். பின்னர் அதில் கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்க்கவும். நன்றாக கிளறி விட்டு, மூடி வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன், இறக்கி வைத்து எலுமிச்சை சாற்றை சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி விடவும்.

நன்றி அடுப்பங்கரை இணையம் 
Download As PDF

Sunday, January 12, 2014

நமது உடலில் உள்ள கலோரியை குறைக்க சில குறிப்புகள்


அதென்ன கலோரி… ஏதோ புதுசா எல்லாம் சொல்றாரே என்று பலரும் எண்ணலாம். உடல் எடை கூடிவிட்டால், சில கிலோ எடையை குறைக்க வேண்டுமானால், முதலில் அதற்கு கலோரியை குறைக்க வேண்டும். அதுக்காகத்தான், நம்மில் சிலர், உடற்பயிற்சி, ட்ரெட்மில்,

வாக்கிங் என்று என்னவெல்லாமோ செய்கின்றனர். அப்படி கலோரிக்களை “எரிக்க எரிக்க”த்தான் உடலில் எடை குறையும். நீங்களும் “ஸ்லிம்”மாக இருக்க முடியும்.

சரி, கலோரி (Calorie) என்றால் என்ன தெரியுமா? கலோரி என்பது உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி. அதாவது, உடலில் சீரான இயக்கத்துக்கு இந்த கலோரியும் முக்கிய பங்கை செலுத்துகிறது. வியர்வை சிந்தி வேலை செய்வோருக்கு அதிகமாகவும், “சீட்”டில் உட்கார்ந்து வேலை செய்வோருக்கு குறைவாகவும் தேவைப்படும். கர்ப்பிணிப் பெண்கள் உட்பட சில பெண்களுக்கு என்று இவ்வளவு கலோரி என்று கணக்கு உண்டு.

“டீன் ஏஜ்” வரை கலோரி கணிசமாக தேவை தான். ஆனால், நாற்பது வயதை தாண்டிவிட்டால், உடல் எடை கூடிவிட்டால், “அடடா, கொழுப்பு கூடிவிட்டதே” என்று கலோரியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

கலோரி என்றால், எங்கிருந்தும் கிடைக்கவில்லை. நாம் உண்ணும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் கார்போஹைட்ரேட் மூலம் 50 முதல் 60 சதவீதம் வரை கலோரி கிடைக்கிறது. புரோட்டீன் மூலம் 20 சதவீதம், கொழுப்பு மூலம் 15 முதல் 20 சதவீதம் கிடைக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நாளுக்கு 300 கலோரி தினமும் அதிகமாக வேண்டும். மற்றவர்களுக்கு வயதுக்கு, உடல் உழைப்புக்கு ஏற்ப கலோரி தேவைப்படுகிறது. உதாரணமாக 16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தினமும் கலோரி தேவை, அவர்கள் முழு உடல் எடைக்கு 2200 கலோரி தேவை. ஆனால், உடல் எடை கூடிவிட்டது என்று தெரியும் போது, கலோரியை குறைக்க என்ன செய்யலாம் என்று டாக்டர்களிடம் தான் கேட்க வேண்டும்.

ஒருவருக்கு எவ்வளவு கலோரி தினமும் தேவைப்படுகிறது என்பதை “ஹாங்ஸ் பெனடிக்ட் பார்முலா”படி டாக்டர்கள் முடிவு செய்கின்றனர். உடலுக்கு கலோரியும் தேவை, உடல் எடையும் கூடிவிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த கலோரி நிர்ணயம் செய்யப்படுகிறது.


* உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் (Carbohydrates) , புரோட்டீன், கொழுப்புகள் ஆகியவற்றில் இருந்து கலோரி கிடைக்கிறது.

* உடலின் எரிசக்தியான கலோரி (Calorie), பல வகை இயக்கங்களுக்கும் தேவை என்றாலும், அது அதிகமாகிவிட்டால், கொழுப்பாக மாறிவிடும்.

* புரோட்டீன் (protein), கார்போஹைட்ரேட்டின் ஒரு கிராமில் நான்கு கலோரி (Calorie) உள்ளது. கொழுப்பில் தான் அதிக கலோரி, அதாவது, ஒன்பது கலோரி உள்ளது.

* நீங்கள் சாப்பிடும் முறை, அதனால், உடல் கூடுவது, உடல் உழைப்பு போன்றவற்றால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலில் கலோரியை சேர்க்கக் கூடாது. சேர்ப்பதால் தான் கொழுப்பு கூடி, உடல் எடை கூடுகிறது.

* ஒருவருக்கு எடை கூடிவிட்டது என்றால், அதை போக்க கலோரியை “எரிக்க” வேண்டும். உடற் பயிற்சி, ட்ரெட் மில், வாக்கிங் என்று வியர்வை சிந்தி தான் உடலில் “கொழுப்பாக தேங்கிய” கலோரியை எரிக்க முடியும்.

* ஒருவர் ஒரு பவுண்ட் எடையை குறைத்துள்ளார் என்றால், 3500 கலோரியை எரித்து இருக்கிறார் என்று அர்த்தம். உடற்பயிற்சியால், ஒரு வாரத்தில் இதை செய்ய முடியும்.

அதனால், உங்கள் உடல் இயக்கத்துக்கு தேவையான கலோரிகளை சீராக பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்க சீரான உணவுப் பழக்கங்கள் தேவை. அதிக கலோரி உள்ள உணவுகளாக சாப்பிட்டால், அதிக கலோரி சேர்ந்து, அதிக கொழுப்பு சேரும்.

அப்படி கொழுப்பு சேர்ந்தால், அப்புறம் கேட்கவே வேண்டாமே, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி என்று தொடருமே.


Posted Image

எந்த ஜூசில் அதிக கலோரி?
காபி, டீ, ஜூஸ் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஆனால், அடிக்கடி அதிக கலோரி உள்ள ஜூஸ் சாப்பிடுவதும் கூடாது. அதுவும், எடை கூடிவிட்டது என்று தெரிந்தும், அதிக கலோரி உள்ள பானங்களை விழுங்கினால், அப்புறம் கொழுப்பு குவிந்துவிடும்.
ஆப்பிள் ஜூஸ் – 55

திராட்சை ஜூஸ் – 55

மாம்பழ ஜூஸ் – 58

ஆரஞ்சு ஜூஸ் – 44

பைனாப்பிள் ஜூஸ் – 52

கரும்பு ஜூஸ் – 36

தக்காளி ஜூஸ் – 17

தேங்காய் பால் – 76

இளநீர் – 24

காபி (ஒரு கப்) – 98

டீ (ஒரு கப்) – 79

கோக்கோ (ஒரு கப்) – 213

பசும்பால் – 65

ஸ்கிம் மில்க் – 35

தயிர் – 51


“ப்ரைடு” உணவுகளா? “டீன்” பெண்ணே உஷார் நீங்கள் ஆணா, பெண்ணா, டீன் ஏஜா, அடிக்கடி “ப்ரைடு” அயிட்டங்கள் வெளுத்துக்கட்டுவீர்களா? ஆண்களாக இருந்தால், அவர்களுக்கு ஐம்பதை தாண்டியவுடன் சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று தான் வரும். ஆனால் பெண்களுக்கு, அவர்கள் திருமணத்துக்கு பின்னர் “வேலையை” காட்டிவிடுமாம்.

இதை அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக பொதுசுகாதார ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.


அவர்கள் சொல்லும் சில எச்சரிக்கை தகவல்கள்:

* சில “ப்ரைடு” உணவு வகைகளில் அதிக கொழுப்பு உள்ளது. இது ஆரோக்கியமற்ற கொழுப்பு. ஆண்களை விட பெண்களை தான் அதிகம் பாதிக்கும்.

* இதை “டிரான்ஸ் ஃபேட்” என்பர். ப்ரைடு ரைஸ் (Fried rice) , ப்ரைடு சிக்கன் (Fried chicken), குக்கீஸ், பாஸ்ட்சுஸ் போன்றவற்றில் இருக்கும். இது ரத்த நாளங்களில் பதிந்து சுருக்கிவிடும்.

* கருப்பை தொடர்பான மலட்டுத் தன்மையை இந்த “ப்ரைடு” உணவுகளால் ஏற்படும் “டிரான்ஸ் பேட்” எனப்படும் கொழுப்பு அதிகரிக்கும்.

* வெறும் இரண்டு சதவீதம் அளவுக்கு இந்த கொழுப்பு சேர்ந்தால் போதும், அதனால் இரண்டு மடங்கு மலட்டுத் தன்மை பாதிப்பு வரும்.
 
Download As PDF

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை ! (சிறு பார்வை)

Posted Image


சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.

இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.


பிறப்பு: ஜனவரி 12, 1863

பிறந்த இடம்: கல்கத்தா, இந்தியா

இறப்பு: ஜூலை 4, 1902

தொழில்: தத்துவவாதி, துறவி

நாட்டுரிமை: இந்தியா


பிறப்பு


சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.

குழந்தைப் பருவமும், ஆரம்பகாலக் கல்வியும் 

ஒரு குழந்தையாக சுவாமி விவேகானந்தர் அவர்கள், மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருந்தார். இவர் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் மிகச் சிறந்து விளங்கினார். இவர் மிகச்சிறிய வயதிலேயே, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றைப் பயிற்சி மேற்கொண்டு பயின்றார். இவர் இளம் வயதில் இருக்கும் பொழுதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடபழக்கவழக்கங்கள் பற்றிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார். ஒரு குழந்தையாக இருந்த போதே, சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு துறவிகள் மீது பெரும் மரியாதை இருந்தது. யார், எதை அவரிடம் கேட்டால், கேட்டவுடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரிடம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவார். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, தியாகம் மற்றும் முடிதுறக்கும் உணர்வு இருந்தது எனலாம்.


உயர்கல்வியும், ஆன்மீக ஈடுபாடும்

சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். அவர் மேற்கிய தத்துவங்களையும், தருக்கவியலையும், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார். அவர் தனது ஆய்வுகளில் முன்னேறியதும், அவரது சிந்தனைகளின் பீடம் அபிவிருத்தி அடைந்தது. கடவுள் இருப்பது பற்றித் தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது. இதுவே, அவரை ‘கேஷப் சந்திர சென்’ தலைமையிலான முக்கிய மத இயக்கமான ‘பிரம்ம சமாஜில்’ இணைய செய்தது. ஆனால், பிரம்ம சமாஜின் பிரார்த்தனைகளும், பக்தி பாடல்களும் கடவுளை உணர்த்தாதன் காரணமாக அவருடைய ஆர்வம் பூர்த்தி அடையவில்லை.

இந்த நேரத்தில், தஷினேஸ்வர் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர்’ பற்றி சுவாமி விவேகானந்தர் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லையென்றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். அவர் பல முறைக் கடவுளை உணர்ந்தார் என்றும் கூறினார். ஒருமுறை, சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது நண்பர்களுடன் அவரைப் பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார். அவர் ராமகிருஷ்ணரிடம், “கடவுள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு உடனடி பதிலாக, ராமகிருஷ்ணர் அவர்கள், “ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கிறேன்” என்றார். இது சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது. அவர் ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் நேர்மையானதாகவும், அவருக்குக் கிடைத்த ஆழ்ந்த அனுபவமே அவரை இவ்வாறு உச்சரிக்க செய்தது என்பதையும் உணர்ந்தார். இதுவே, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணர் அவர்களை சென்று சந்திக்கக் காரணமாக அமைந்தது.


ராமகிருஷ்ணர் மீது அவர் கொண்ட பற்று

எதையும் முற்றிலும் ஏற்குமுன், அதனை சோதித்துப் பார்க்கும் குணம், சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு இருந்தது. ஆகவே, எந்த ஒரு சோதனையும் இல்லாமல் ராமகிருஷ்ணரர் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொள்ள அவரால் இயலவில்லை. அப்போது அவருக்கு ராமகிருஷ்ணரர் அவர்கள் உரைத்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். இதனை நினைவில் கொண்ட விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணர் அவர்களின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நோட்டை மறைத்து வைத்தார். வெளியில் சென்ற ராமகிருஷ்ணர் அவர்கள், தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார். மறுகணமே, அவருக்குத் தேள் கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்தார். பின்னர், அவரது மெத்தையை உதறியபோது, அவர் ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார். பின்னர், இச்செயல் சுவாமி விவேகனந்தருடையது என்பதையும் அறிந்தார், ராமகிருஷ்ணர் அவர்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். 1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்கள் காலமானார். அதன் பின்னர், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார். ராமகிருஷ்ணரர் அவர்களது மரணத்திற்குப் பின், சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ணரரின் ஒரு சில முக்கிய சீடர்களும் துறவறம் பூண்டுவது என்று சபதம் எடுத்து, பரனகோர் என்ற இடத்தில் பேய்கள் நடமாடுவதாகக் கருதப்படும் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.

இந்தியாவில் அவரது பயணம்
1890 ஆம் ஆண்டில், சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஒரு நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணத்தில் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றார். அவரது இந்தபி பயணத்தின் போது அவர், வாரணாசி, அயோத்தி, ஆக்ரா, விருந்தாவன், ஆழ்வார் போன்ற பல இடங்களுக்கும் சென்று வந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, அவரது இயற்பெயரான ‘நரேந்திரா’ மறைந்து ‘சுவாமி விவேகானந்தர்’ என்று பெயர் பெற்றார். நல்லது மற்றும் கேட்டது என்று பகுத்தறியும் அவரது திறனுக்காக, மகாராஜா கேத்ரி என்பவர், இவருக்கு ‘விவேகானந்தர்’ என்று பெயரிட்டார் என்று பலரும் கூறுகின்றனர். அவரது இந்தப் பயணத்தின் போது, விவேகானந்தர் அவர்கள், மன்னரின் அரண்மனைகளிலும், ஏழைகளின் குடிசைகளிலும் தங்கினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் பல வகையான மக்களிடம் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. விவேகானந்தர் அவர்கள், சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி கொடுங்கோன்மையை கவனித்தார். இந்தியா ஒரு உயிருள்ள தேசமாக ஆக்கப்படவேண்டும் என்றால், ஒரு தேசிய புத்துயிர்ப்புத் தேவை என்று உணர்ந்தார்.

சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். அவர் அமர்ந்து தியானம் செய்த அந்தப் பாறையே, விவேகானந்தர் அவர்களின் நினைவாக பிரபலமாகவும், ஒரு முக்கிய சுற்றுலா தலமாகத் திகழும் ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இன்றும் உள்ளது.



Posted Image

மேலைநாடுகளில் விவேகானந்தரின் சொற்பொழிவுகள்
1893ல், சுவாமி விவேகானந்தர் அவர்கள், சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். மேடையில் அவரது உரையின் தொடங்குவதற்கு முன், “அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!” என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காகக் காட்டு கரவொலி பெற்றார். ஸ்வாமிஜி அவரது பிரமாதமான பேச்சுத்திறன் மூலமாக அமெரிக்காவிலுள்ள அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாச்சாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார். அவர் வரலாறு, சமூகவியல், தத்துவம் அல்லது இலக்கியம் போன்ற எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும், தன்னிச்சையாக எளிதாகப் பேசினார். அவர், இந்தியாவில் கிறிஸ்துவ மதபிரச்சாரகர்கள் ஏவிவிடும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களை வெறுத்தார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், இங்கிலாந்துக்கும் சென்றார். பல மக்கள் அவரது சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், ‘மார்கரெட் நிவேதிதா’. பின்னர், அவர் இந்தியா வந்து குடியேறினர்.

ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் ராமகிருஷ்ணா மடம்

மேற்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், 1897ல் இந்தியா திரும்பினார். இந்தியர்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சிக்கான தகவல்களைப் பரப்பத் தொடங்கினார். ‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று அவர் உணர்ந்தார். இந்த குறிக்கோளை அடைய, சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1897ல் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, அவர் கட்டிடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிறுவினார். மீண்டும், அவர் ஜனவரி 1899 முதல் டிசம்பர்1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.


இறப்பு

மேலை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.

காலவரிசை

1863: கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் பிறந்தார்.

1879: கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.

1880: கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.

1886: ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்களின் மறைவுக்குப் பின், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார்.

1890: இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணம்.

1892: கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார்.

1893: சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார்.

1897: இந்தியா திரும்பினார்

1897: “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.

1899: ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிருவவதற்காக கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார்.

1899 – 1900: ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1902: கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.
 
Download As PDF