Thursday, November 17, 2011

குழந்தைகள் பற்றி சில குறிப்புகள்

கொலுசு அணிவிப்பது ஏன்? 
கொலுசு அணிவது என்பது ஓல்டு பேஷன் என்பவர்களும் உண்டு. ஆனால், இந்த பாயிண்டுகளை படித்து பாருங்கள், "கொலுசு' ஆச்சரியப்பட வைக்கும். தங்கத்துக்கு அடுத்து அத்தனை பெருமைகளும் கொண்டது வெள்ளி. வெள்ளி நகைளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் சொல்லியிருக்கின்றன. நம் உடம்பில் உள்ள தேவையில்லாத சூட்டை உடனுக்குடன் வெளியேற்றி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இன்னொரு ஸ்பெஷல் விஷயம் சருமத்தை ஆரோக்கியமாக ஜொலிக்க வைக்கும்.
குழந்தைக்கு கொலுசு போடுவது குழந்தையின் உணர்வுகளை அம்மாவிற்கு உணர்த்தத்தான். தூளியில் படுத்திருக்கும் குழந்தை விழித்ததும் காலை ஆட்ட ஆட்ட கொலுசு சப்தமிட்டு குழந்தை எழுந்ததை அறிவிக்கும்.
குழந்தை அடுத்தடுத்த பருவங்களில் அதாவது, தவழும்போது நடக்க தொடங்கும்போதும் குழந்தையின் கொலுசு சத்தம் கேட்பது அம்மாவுக்கு இனிய சங்கீதம் மட்டுமல்ல... குழந்தை எங்கே இருக்கிறது என்பதை அறிவிக்கும் மணியும் கூட.
கொலுசு ஓசை கேட்காவிட்டால் குழந்தை எங்கு சென்றுவிட்டதோ என்று அச்சம் கொள்வாளாம் அந்த குழந்தையின் அம்மா!
வாவ்! இனியாவது உங்க குழந்தை செல்வங்களுக்கு கொலுசு போடுவீங்கதானே!


பெற்றோரின் வசீகரம்!
குழந்தையை கொஞ்சுபவர்கள் அது அம்மா ஜாடை, அப்பா ஜாடை, மாமா ஜாடை என சொல்லி சொல்லி மகிழ்வர். லண்டனில் செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் "பெற்றோரின் வசீகரம், அழகு அவர்களின் வாரிசுகளில் மகன், மகள் யாருக்கு தொடரும்' என்ற ஆய்வை பேராசிரியர்கள் டேவிட் பெரட், எலிசபெத் கார்னவெல் ஆகியோர் செய்தனர்.

ஆய்வின் முடிவு...
குடும்பத்தில் மரபு வழியாக சில விஷயங்கள் ஒரே மாதிரியாக தொடரும். அந்த வகையில் ஒரு குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக தொடருவதில் வசீகரமும் ஒன்று. 
நூற்றுக்கணக்கான குடும்பங்களின் போட்டோ ஆல்பம் உடல் ரீதியான சில விஷயங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தோம். அதில் பல வித்தியாசமான தகவல்கள் கிடைத்தன. பல குடும்பங்களில் பெற்றோரின் வசீகரம், அழகு அவர்களின் மகள்களிடம் தொடர்வதை தான் காண முடிந்தது. அதே சமயம், அவர்களை போல, மகன்கள் அவ்வளவு வசீகரமாக இல்லை.
தாய், தந்தை இருவரிடத்தும் உள்ள வசீகரம் தான் மகள்களுக்கு முழுமையாக போய் சேருகிறது. ஆனால், மகன்களுக்கு முழுமையாக போய் சேருவதில்லை. இதற்கு மரபு ரீதியாக காரணங்கள் இருக்கலாம். அது பற்றி இன்னும் ஆராய வேண்டும். இதுபோல, புஜபலத்துடன் தந்தை இருந்தால், அவருக்கு அதே மாதிரி நல்ல ஆஜானுபாகுவான மகன்கள் வளருவர் என்பதும் எங்கள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


குழந்தையின் வலி- அலட்சியம் வேண்டாம்!
வயிற்றுவலி, தலைவலி, கால்வலி, இவற்றில் ஏதேனும் ஒன்று இருப்பதாக குழந்தை சொன்னால், "ஸ்கூலுக்கு மட்டம் போடறதுக்கு சாக்கா... எல்லா சரியாயிடும்' என்று அதட்டும் பெற்றோர்களே அதிகம்.
எல்லா நேரங்களிலும், எல்லா குழந்தைகளும் இப்படி படிப்பிலிருந்து தப்பிக்க மட்டுமே வலிகளை காரணம் காட்டுவதில்லை. அவர்களுக்கு நிஜமாகவே வலி இருக்கலாம். அந்த வலியின் பின்னணியில் பல காரணங்களும் இருக்கலாம்.
15 முதல் 20 சதவீத குழந்தைகள் நாள்பட்ட வலியில் அவதிப்படு கின்றனர். குழந்தைகளுக்கு வருகிற வலி, பெரியவர்களுக்கு வரும் வலியிருந்தும் வேறுபட்டது. காரணம் 5 வயதுக்குப்பட்ட குழந்தைகளால் வலி உணர்ச்சியை தெளிவாக சொல்ல முடியாது. வலியை தவிர மற்ற அறிகுறிகளே பிரதானமாக இருக்கும். வலியை கண்டுபிடிக்கிற முயற்சியில், பல மருத்துவர்களும் பல அறிவுரைகளை சொல்வதால் பெற்றோர் குழம்பியிருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் என்ன செய்தும் வலி நிற்கவில்லை என்கிறபோது எக்கசக்க மன அழுத்தத்துக்கு தள்ளப்படுகிறார்கள். 5 வயதுக்கு மேலான குழந்தைகளால்தான் வலியை ஓரளவு உணர்த்த முடியும். வலியினால் அவதிப்படுகிற குழந்தைகளிடம் வழக்கத்துக்கு மாறான எரிச்சல், சோர்வு, அமைதி போன்றவை காணபட்டாலோ, மூர்க்கத்தனம், தூக்கமின்மை, உணவு பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, செயல் திறனிலோ, கவனத்திலோ குறைவு உண்டானாலோ... அவற்றை வலிக்கான அறிகுறிகளாக கணக்கில் கொள்ளலாம். 
இந்த வலிகளுக்கு உடல்ரீதியான காரணங்கள் இருக்கலாம். அதாவது உடலுக்குள் உள்ள நோயின் விளைவாக வலி ஏற்படலாம். ரத்த சோகை, நுரையீரல் பிரச்னை, புற்றுநோய், உடல் சோர்வு நோய், சிறுநீர் பிரச்னை போன்றவற்றால் கூட வலி வரலாம்.
அடுத்து மனரீதியான மற்றும் சமூக ரீதியான காரணங்கள்... பள்ளியில் ஏற்படும் பிரச்னைகள், பெற்றோருடன் உண்டாகிற சண்டை, பிரிவு, மரணம், நெருங்கிய உறவினரின் பிரிவு, இடமாற்றம், பராமரிக்கிற நபர் மாறுதல் போன்ற பல விஷயங்கள்....
12 முதல் 14 வயது வரையிலான பிள்ளைகளுக்கே வலி அதிகமிருக்கிறது. இதில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். 30 சதவீதத்தினருக்கு முதுகு வலியும், 50 சதவீதத்தினருக்கு தலைவலியும் இருக்கிறது. வயிற்று வலி பரவலாக இருக்கிறது. வயிற்று வலிக்கு கிருமிகளோ, அப்பென்டிக்ஸ் எனப்படுகிற குடல்வால் பிரச்சனையோ காரணம் ஆகலாம். காலை உணவை தவிர்ப்பது, டென்ஷன் போன்றவற்றால் தலைவலி வரும்.
பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்துகள் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. வெறும் மாத்திரைகளால் மட்டுமே குணப்படுத்த கூடியதில்லை. குழந்தைகளின் வலிகள். அவர்களுக்கென தனி மருந்து முறைகளும், ஆலோசனைகளும் நிச்சயம் தேவை.
இனி உங்கள் குழந்தை வலிக்கிறது என்று சொன்னால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது!
Download As PDF

இயற்கை உணவே இனிய உணவு

முளை தானியம் என்னும் அற்புத உணவு! 
மனிதன் பிறந்ததே சாப்பிடத்தான் என்பது போல, இன்றைய தேதிக்கு சைவத்திலும், அசைவத்திலும் வித, விதமான உணவுகள் உலகமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆரோக்கிய கேடே மண்டிக் கிடக்கிறது.
போதாதற்கு நித்தமும் ஒரு புத்தம் புது உணவைக் கண்டுபிடித்து ஓட்டல்காரர்கள் வாழ்கின்றனர்; மக்கள் நோகின்றனர்.
இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.
இயற்கை உணவு என்பது ஏதோ ஒன்று அல்ல, எல்லாம் நமக்கு தெரிந்ததே.
பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான், முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி, 8 மணி நேரம் ஊற வைத்து, பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால், 8 - 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். (இப்போது இந்த வேலையைச் செய்யும், "ஸ்பிரவுட்ஸ் மேக்கர்' என்ற பிளாஸ்டிக் டப்பாக்கள் விற்கப்படுகின்றன). இப்படி தயாரான இந்த தானியத்துடன் விருப்பம் போல தேங்காய், வெல்லம், தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள் ஆகியவைகளை சேர்த்தோ, சேர்க்காமாலோ சாப்பிட வேண்டியதுதான்.
இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும், அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான, உன்னதமான உயிர் உணவு.

இதன் பயனை உணர்ந்து கொண்டால், கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும். இந்த முளை தானியத்தில் இருந்து முளை தானியக் கஞ்சி, சப்பாத்தி, தோசை, அடை போன்ற உணவுகளையும் தயாரித்து, சாப்பிடலாம்.
இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன், விட்டமின் ஏ, பி1, பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால், புற்றுநோய் மட்டுப்படும். முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால், ஒல்லியானவர்களுக்கு உடல் போடும், கண்பார்வை மேம்படும். முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம், தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் பருமன் குறையும், மூட்டுவலி தீரும்.இன்னும், இன்னும் இப்படி எத்தனையோ மகத்துவத்தை செய்யவல்லதுதான் முளைவிட்ட தானியங்கள்.
இப்படி நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல, எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு. இருந்தும் இந்த முளைவிட்ட தானியம் மக்களிடம் பிரபலமடையாத தற்கு காரணம், வேகமான உலகில் நாம் இருப்பதுதான். இதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஆனால், அதற்கு யாரும் தயாராக இல்லை. ஒரே வார்த்தைதான், நீங்கள் உங்கள் உடலின் நண்பன் என்றால் மெனக்கெடலாம். இல்லை, எதிரி என்றால் விருப்பம் போல இருந்து கொள்ளுங்கள்.

இந்த முளைவிட்ட தானியங்களின் அருமையை உணர்ந்த சிவகாசியைச் சேர்ந்த மாறன் என்பவர், இதை, மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை ஒரு லட்சியமாகவே கொண்டுள்ளார். ஒரு வேளை உணவாக சிறு, சிறு பாக்கெட்டுகளில் போட்டு, அதில் கூடுதல் சுவைக்காக நெல்லி, கேரட் போன்றவைகளை கலந்து வெறும், ஏழு ரூபாய்க்கு விற்று வருகிறார் .உங்கள் வீட்டு விசேஷம் என்றால் வித்தியாசமாக இந்த இயற்கை உணவை பரிமாறவும் இவர் தயார். அல்லது நேரில் வந்து இயற்கை உணவு பற்றி சொல்லுங்கள் என்று போன் போட்டு சொன்னாலும் (93674 21787) உங்கள் இருப்பிடத்திற்கே வந்து சொல்லித் தரவும் தயார். எப்படியா வது வரும் தலைமுறை இந்த இயற்கை உணவை சாப்பிட்டு, கொண்டு ஆரோக்கியமான தலைமுறையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். இது, அவருடைய லட்சியம் மட்டுமல்ல; நம்முடையதும்தான். 
Download As PDF

Friday, November 11, 2011

கைத்தொலைபேசிகளின் கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள




உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை பெறுவதற்கு கைத்தொலைபேசிகள் பயன்படுகின்றன. இதில் உள்ள வசதிகளால் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.
2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
நன்றி lankasri இணையம் . 
Download As PDF

Thursday, November 10, 2011

ஞாபக மறதியிலிருந்து விடுபடுவதற்கு


பலரையும் பாதிக்கும் பிரச்னை ஞாபக மறதி. சரியான காரணத்தை கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்
.
மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று நேரத்தை திட்டமிடாமை.
காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் டென்ஷனுடன் செய்வதால் மனம் நிம்மதியற்று போகிறது. இந்த சூழலில் சாதாரண விஷயங்கள் கூட எளிதில் மறந்து விடுகிறது. நேரத்தை திட்டமிடுவதன் மூலம் டென்ஷனில் இருந்து விடுபட முடியும்.
மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமான விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக்க மாற்றலாம். அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து நினைவுக்கு கொண்டு வர முடியும்.
மறதிக்கு இன்னொரு முக்கிய காரணம் கவனச்சிதறல். இதனால் முக்கிய விஷயங்கள் நினைவில் பதியாமல் போகிறது. ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்வது மற்றும் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாக கைவிட வேண்டும்.
இவர்கள் ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையில் முழு கவனம் வைப்பதன் மூலம் மறதியை தடுக்க முடியும். மறக்கும் பழக்கம் அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
நினைவாற்றல் பிரச்னை மூன்று வகைப்படும். முதலாவது குறுகிய கால நினைவாற்றல். பயன்படுத்திய தொலைபேசி எண்ணை உடனடியாக மறந்து விடுதல் இந்த வகை. அடுத்த வகை அண்மைக் கால நினைவாற்றல்.
இதில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்ததை நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். சிறு வயதில் நடந்த விஷயங்களை மறந்து விடுவது நீண்ட கால நினைவாற்றல் குறைபாடு.
ஞாபக மறதிக்கு பல காரணங்கள் உள்ளன. மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு மற்றும் தலையில் அடிபடுவதால் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
குடிப்பழக்கம், வலிப்பு, பார்வை குறைபாடு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கும் நினைவாற்றல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிகளுக்கு குறுகிய கால, அண்மைக் கால நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படலாம்.
நினைவாற்றல் பிரச்னையை பொதுவாக அல்சைமர் நோய் என்று அழைக்கிறோம். முதலில் அண்மை கால நினைவுகளை படிப்படியாக இழக்கின்றனர்.
புதிய தகவல்களை கற்பது மற்றும் நினைவில் வைத்து கொள்வதிலும் பிரச்னை ஏற்படும். ஒன்றையே திரும்பத் திரும்பக் கூறுவது, பொருட்களை இடம்மாற்றி வைத்து விட்டு தேடுவது போன்ற குழப்பங்கள் காணப்படும்.
தனி மனித ஆளுமை, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சமூக பழக்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படும். இதுபோன்ற காரணங்களால் பதற்றம், கடுப்பு, மனச்சோர்வு மற்றும் குழப்பம், அமைதியின்மை ஆகிய பிரச்னைகள் உண்டாகி நிம்மதியற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
இது போன்ற ஆரம்ப அறிகுறிகள் தெரியும் போதே சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். பாதுகாப்பு முறை: ஒரு குழந்தை லட்சக்கணக்கான மூளை செல்களுடன் பிறக்கிறது. மனிதனுக்கு வயதாகும்போது படிப்படியாக மூளை செல்களில் சில அழிகிறது. புதிதாக எதுவும் உருவாவதில்லை.
வயதாகும் போது மூளை செயல்பாட்டுக்கு தேவையான வேதிப் பொருட்கள் உடலில் சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால்தான் வயதாகும் போது நினைவாற்றல் பிரச்னை உருவாகிறது.
சிறு வயதில் இருந்தே பதற்றமான வாழ்க்கை சூழலை மாற்றி நேரத்தை திட்டமிட குழந்தைகளை பழக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற டென்ஷனை தவிர்க்கலாம்.
சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவை மனநிலையை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும். இதன் மூலம் நினைவாற்றல் பிரச்னையை தவிர்க்கலாம். நேரத்தையும் வேலையையும் திட்டமிடுவதன் மூலம் மறதிக்கான வாய்ப்பை குறைக்கலாம்.
அடுத்ததாக நினைவாற்றலை அதிகரிக்க பயிற்சி அளிக்கலாம். புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடலாம். எப்போதும் பரபரப்பாக இருப்பதை விடுத்து மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம்.
அந்த நேரங்களில் மறக்கும் விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதன் மூலம் முக்கியமான விஷயங்களை மனதில் பதிய வைக்கலாம். செய்ய வேண்டிய வேலை மற்றும் மறக்கும் விஷயம் குறித்து தாளில் எழுதி வைத்து நினைவுக்கு கொண்டுவரலாம். முக்கியமாக, மறதிக்காக கவலைப்பட கூடாது. இதனாலும் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
நன்றி - lankasri tehnology
Download As PDF

வாய்மொழிச் செய்திகளே பழமொழிகளாக ஆயின


மனித வாழ்வியலின் காலங்காலமாகப் பட்டுணர்ந்த பட்டறிவின் காரணமாகத் தோன்றியவையே பழமொழிகள். ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வில் பல்வேறு நேர்வுகளில் பலவித நிகழ்வுகளைச் சந்தித்திருப்பர். அந்நிகழ்வுகளில் நல்லதும் நடந்திருக்கும் கெட்டவையும் நடந்திருக்கும். அவற்றை உற்று நோக்கிச் சில காரணத்தால் ஏற்பட்டிருக்கும் என்று நம்பி உரைத்த வாய்மொழிச் செய்திகளே பழமொழிகளாக ஆயின.


நாட்டுப்புற வாய்மொழி இலக்கியக் கூறுகளுள் ஒன்றான
 பழமொழியை முதுமொழி எனத் தொல்காப்பியம்


"நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும் 
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முத்தற்கு வரும்
ஏது நுதலிய முதுமொழி என்ப"

என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். இன்றும் மலையாள மொழியில் பழமொழியைப் பழஞ்சொல் என்றே கூறுவதைக் காணலாம்.


"பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே யாகுதல் வாய்த்தமை தோழி"

என அகநானூறும்,

"நீ அறிந்திலையோ நெடுமொழி அன்றே"

எனச் சிலப்பதிகாரமும் எடுத்துரைக்கும் இலக்கிய மேற்கோள்கள். பழமொழியானது தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் அவர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற வகையில் கையாளப்பெற்று வருகின்றது.

தமிழகக் கிராமப்புறங்களில் இன்றைக்கும் பேச்சு வழக்கில் பல வகையான பழமொழிகள் கையாளப்பட்டு வருகின்றன. பேச்சு வழக்கில் இன்றைக்கும் பாமரமக்கள் மற்றும் படித்த மக்களால் பேசப்பட்டு வரும் பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளது இக்கட்டுரை.


பழமொழிகள் கையாளப் பெறும் சூழல்கள்:-
அனுபவத்தால் பிறக்கும் பழமொழிகள் அன்றாடப் பேச்சு வழக்கில், இன்ப நிகழ்வுகளின் போதும், துன்ப நிகழ்வுகளின் போதும், ஏசலாகவும், கேலியாகவும் அண்டை வீட்டாருடன் சண்டைகள் போடும்போதும், ஒருவரை ஒருவர் மறைமுகமாகச் (சாடை பேசுதல்) சாடுகின்றபோதும் பழமொழிகளைக் கையாளுகின்றனர். இவ்வகையில் பிறக்கும் பழமொழிகளை,
1. உவமையாக வரும் பழமொழிகள்.
2. உறவுகள் பற்றி வரும் பழமொழிகள்.
3. பொதுவாக வருவன.



1. உவமையாக வரும் பழமொழிகள்:-

1. ஒரே குட்டையில் ஊறிய மட்டைபோல.
2. கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் போல.
3. பார்த்தால் பசுப்போல், பாய்ந்தால் புலிபோல்.
4. எருமை மாட்டில் மழை பெய்தது போல.
5. இருதலைக் கொள்ளியின் ஓர் உயிர் போல.
6. தேன் எடுப்பவன் வீரல் சூப்புவது போல.
7. குப்பைமேடு கோபுரமானது போல.
8. குறைகுடம் கூத்தாடுவது போல.

2. உறவுகள் பற்றி வரும் பழமொழிகள்:-

1. பருவத்தே பயிர் செய்தல் வேண்டும்.
2. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.
3. மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி.
4. ஆடு பகை குட்டி உறவு.
5. நல்ல மாடு உள்ளுரில் விலைபோகும்.
6. பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்.
7. அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழி.
8. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.
9. நித்தம் நித்தம் வந்தால் நெய்யும் புளிக்கும் பலநாளும் வந்தால் பாலும் புளிக்கும்.
10. ஆகாத பொண்டாட்டி கால் பாட்டாலும் குத்தம் கைப்பட்டாலும் குத்தம்.
11. பொருள் ஒரு பக்கம் போக பொல்லாப்பு ஒரு பக்கம் வரும்.
12. பெட்டியிலே பூட்டினாலும் போட்ட விதி தப்பாது.
13. தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு.

இவை போன்று வரும் பழமொழிகள் உறவுகள் பற்றியும், உறவுகளால் வரும் துன்பங்கள் பற்றியும் கூறுவதாக அமைந்துள்ளன.

3. பொதுவான பழமொழிகள்

1. நாற்றில் வளையாதது மரத்தில் வளையாது.
2. நம்பினவனை நட்டாத்தில் விடுதல்.
3. சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான்.
4. தன் முதுகு தனக்குத் தெரியாது.
5. எலி வளையானாலும் தனிவளை வேண்டும்.
6. வல்லவனையும் வழுக்கும் வழுக்குப் பாறை.
7. குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப் போச்சு.
8. கோடி கோடியா வாழ்ந்தாலும் இறுதியில் ஒரு கோடிதான் மிச்சம்.
9. குவளையைக் கழுவினாலும் கவலையைக் கழுவ முடியாது.
10. உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்.
11. உழுகிறவர்கள் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.
12. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி.
13. மடியில கனம் இருந்தால் தான் விழியல பயம்.
14. சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
15. அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
16. ஈட்டி எட்டின வரைதான் பாயும் பணம் பாதாளம் வரையும் பாயும்.
17. ஏழையின் பேச்சு அம்பலம் ஏறாது.
18. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்.
19 பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
20. பேராசை பெரும் நட்டம்.
21. முழு பூசணிக்காயை சோத்துல மறைத்தல்.
22. ஆசை காட்டி மோசம் செய்தல்.
23. ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கவில்லை.
24. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.
25. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்.
26. இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பான்.
27. அவனே! அவனே! என்பதைவிடச் சிவனே! சிவனே! என்பது மேல்.
28. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இரு.
29. தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
30. தன் வினை தன்னைச் சுடும்.
31. நாய் நடுகடலுக்குப் போனாலும் நக்கித்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
32. ஓட்டச் சட்டியினாலும் கொழுக்கட்டை வெந்தா சரி.

இவை போன்று வரும் பழமொழிகள் பெண்களாலும், ஆண்களாலும், படித்தவர்களாலும், பாமர மக்களாலும் அவர்கள் இருக்கும் இடம் கருதியும் சூழலுக்குத் தக்கவாறும் கையாளப்படுகின்றன.

மேற்கூறப் பெற்றுள்ள பழமொழிகள் தமிழகத்தில் சில பகுதிகளில் வாழும் மக்கள் இன்றைக்கும் பேச்சு வழக்கில் பேசி வருகிறார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளன. 



மிக்க நன்றி செந்தில்குமார் ( facebook )  நண்பர் ....  
Download As PDF

Saturday, November 05, 2011

வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்: ஆய்வாளர் தகவல்



மின்சாரத்தின் பயன் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மின்சாரத்தின் உபயோகம் நாளுக்கு நாள் பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது.
ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும் கிரைண்டர் மிக்சிகள் ஆனது போல் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கனரக எந்திரங்கள் மூலம் இயங்கும் தொழிற்சாலைகள் வரை மின்சாரத்தை நம்பித்தான் உள்ளன.
அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களும் மின்சாரத்தை நம்பியே இருக்கும் நிலையில் மின்சாரத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி இருக்கிறது.
மின்சார தட்டுப்பாட்டில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒவ்வொரு நாடும் பல்வேறு மாற்று திட்டங்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு ஆர்வம் காட்டி வருகின்றன.
அணு மின்சக்தி, தண்ணீர், கடல் அலை, காற்று மற்றும் எரிவாயு போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை பயன்படுத்தி மின்சார தட்டுப்பாட்டை போக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். அழுகும் நிலையில் இருக்கும் வாழைப்பழம் மற்றும் விற்பனைக்கு லாயக்கு இல்லை என்று கழிக்கப்படும் சிறிய வாழைப்பழங்கள் போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று அவுஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் பில் கிளார்க் மற்றும் அவரது குழுவினர் இணைந்து வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய நாட்டின் வாழைப்பழ உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அணுகி எங்களிடம் ஆண்டுதோறும் ஏராளமான அளவு வாழைப்பழங்கள் அழுகிப் போகின்றன.
மேலும் விற்பனைக்கு பயன்படாத நிலையில் உள்ள வாழைப்பழங்களும் வீணாக தெருக்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் வீசப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி ஏதாவது நல்லது செய்ய முடிந்தால் பாருங்கள் என்று கூறினார்கள்.
இதை மனதில் கொண்டு பில் கிளார்க் மற்றும் அவரது குழுவினர் வீணாகப் போகும் வாழைப்பழத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கினார்கள்.
அப்போதுதான் வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தனர். இதற்காக ஆய்வுக்கூடத்தில் பெரிய தொட்டி ஒன்றை அமைத்தனர். இதில் வாழைப் பழங்களை போட்டு காற்று புகுந்து விடாதபடி சீல்வைத்து மூடினார்கள்.
வாழைப்பழம் விரைந்து அழுக வேண்டும் என்பதற்காக சில வேதிப் பொருட்களும் அதனுடன் கலந்தனர். இதன் காரணமாக வாழைப்பழம் அழுகி அதில் இருந்து மீத்தேன் வாயு அதிக அளவில் வெளிப்பட ஆரம்பித்தது.
இந்த மீத்தேன் வாயு மூலம் ஜெனரேட்டர் ஒன்றை இயக்கி அதன்மூலம் மின்சாரம் தயாரித்து காட்டினார்கள். இந்த கண்டுபிடிப்பு குறித்து பில் கிளார்க் கூறும் போது, ஆய்வுக்கூடத்தில் எங்கள் பரிசோதனைக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்து பெரிய அளவில் தொழிற்சாலைகள் நிறுவி அதன் மூலம் அதிக அளவில் மின்சாரம் தயாரிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்.
இந்தப்பணி சாதாரணமாக இருக்காது. இது சவால் நிறைந்த பணியாகும். காரணம் மற்ற மின்சாரம் தயாரிக்கும் முறையில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாகும்.
வியாபாரிகளின் கணக்குப்படி ஆண்டு தோறும் சுமார் 20 ஆயிரம் டன்கள் எடை அளவு வாழைப் பழங்கள் குப்பைக்கு வருகிறது. இவை அனைத்தையும் சேகரித்து தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டும்.
பின்னர் இவற்றை தரம் பிரித்து சுத்தம் செய்து பெரிய தொட்டிக்குள் போட வேண்டும். அதோடு அவை விரைவில் மக்கிப்போய் அழுக வேண்டும் என்பதற்காக உரிய வேதிப் பொருட்களையும் சேர்க்க வேண்டும்.
இந்தக் கலவை ஒருசில நாட்கள் அப்படியே இருக்கவேண்டும். அதன் பிறகு அதில் இருந்து மீத்தேன் வாயு வெளிப்படும். இந்த மீத்தேன் வாயுவை பயன்படுத்தி ஜெனரேட்டர்களை இயக்கி அதன் மூலம் வீடுகளில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களை இயக்கலாம்.
தற்போதைய கணக்குப்படி 60 கிலோ வாழைப்பழத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரம் மூலம் ஒரு மின் விசிறியை 30 மணி நேரம் தொடர்ந்து ஓட வைக்க முடியும்.
இதுதொடர்பான ஆராய்ச்சிகள் மேலும் விரிவடையும்போது அதிக அளவு மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறி இருக்கிறார் ஆராய்ச்சியாளர் பில் கிளார்க்.
Download As PDF

இயற்கை முறையிலேயே சில நோய்களுக்கான தீர்வுகள்



நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களிலேயே பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால் முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.
அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.

முக அழகிற்கு உதவும் எலுமிச்சை
எலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மஞ்சள் காமாலை, கண்நோய் மற்றும் ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
ஒரு தே‌க்கர‌ண்டி எலு‌மி‌ச்சை சா‌ரி‌ல் ‌சி‌றிது தென் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச் சருமம் வழவழப்பாக இருக்கும்.
எலு‌மி‌ச்சை பழ‌ச்சாறு அல்லது தயிரை முக‌த்‌தி‌ல் கருமை படர்ந்த இட‌த்‌தி‌ல் தே‌ய்‌க்கவு‌ம். உலர்ந்த பிறகு கழு‌வினா‌ல் கருமை மாறு‌ம்.
எலு‌மி‌ச்சை சாறுட‌ன் ‌வி‌னிகரையு‌ம் சே‌ர்‌த்து உட‌லி‌ல் கறு‌ப்பான இட‌ங்க‌ளி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் ‌நிற‌ம் மா‌ற்ற‌ம் தெ‌ரியு‌ம்.
எலு‌மி‌ச்சை சாறை உண‌வி‌ல் ‌தினமு‌ம் சே‌ர்‌த்து வ‌ந்தா‌ல் முக‌த்‌தி‌ற்கு ந‌ல்லது.
எலு‌மி‌ச்சை சாறு, ப‌ன்‌னீ‌ர், ‌கி‌ளிச‌ரி‌ன் ஆ‌கியவ‌ற்றை ச‌ரியான விகிதத்தில் கலந்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி வரவும்.
எலு‌மி‌ச்சை சாறு பிழி‌ந்த ‌பிறகு அத‌ன் தோலை தூ‌க்‌கி எ‌றியாம‌ல், எலு‌மி‌ச்சை தோலை‌ கை, கா‌ல் ‌விர‌ல் நக‌ங்களை ந‌ன்கு தே‌ய்‌த்து ‌வி‌ட்டா‌ல் நக‌ங்க‌ளி‌ல் படி‌ந்‌திரு‌ந்த அழு‌க்குக‌ள் வெ‌ளியே‌றி நக‌ம் ப‌ளி‌ச்செ‌ன்று மாறு‌ம்.
Download As PDF

கீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்





தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப் பொருட்களையும் பெற ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்களையும், பருப்பையும் சாப்பிட வேண்டும்.
முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.
1. கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில் தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும்.
2. இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும்.
3. வைட்டமின் ஏ நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஏ குறைவினால் கண்கள் பார்வை குறைத்து விடும்.
4. வைட்டமின் ஏ, முட்டை, பால் மீன்எண்ணெய் முதலியவைகளிலிருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான கீரைகளிலிருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிது. ஏ வைட்டமின் சமைக்கும் போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.
5. அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கிரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமாகவுள்ளது.
6. வைட்டமின் பி அகத்திக் கீரை, முளைக்கீரை, கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.
7. வைட்டமின் சி சத்துக் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகின்றது. வைட்டமின் சி அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் கொத்தமல்லி முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது.
8. வைட்டமின் சி சத்து கீரைகளை வேக வைக்கும் போது அழித்துவிடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம் வேக வைக்காமலும், வேவைத்த நீரை இறுத்து விடாமலும் இருக்க வேண்டும். சமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகக் சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும்.
9. நமது இருதயம் சரியாகச் சுருங்கி விரிவதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது.
10. சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரை முதலியவற்றில் அபரிமிதமாகக் கிடைக்கின்றது.
11. இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும்.
12. இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரை முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.
13. மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் சத்துக்களும் தாதுப்புக்களும் ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாகும். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.
14. ஒரு முறை நட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு கீரைகளைப் பறிக்கலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் அவசியம் வளர்க்கப்பட வேண்டிய கீரை தவசிக்கீரையாகும்.
15. வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன.
ஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.
Download As PDF

டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

tea.jpgClick to show "Tea" result 14


டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு.
டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது.
சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
மேலும் டீயில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மண்ணில் இருக்கும் ப்ளோரைடை டீச்செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது.
எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது. பற்களில் காரை படிவதையும் டீ தடுக்கிறது. பல்லை பாதுகாக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. டீ குடித்தாலே போதும்.
வயிற்றுவலி(அசிடிட்டி) ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும் போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்கள்.
டீயில் உள்ள காபின், புளோரைடு போன்ற பொருட்கள் எலும்பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண்களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் பெரும்பாலும் இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தேவையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் ”ப்ளேவோனாய்ட்ஸ்” தடுப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது.
டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.
மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது. தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது.
டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.
இதுபற்றி இந்துஸ்தான யூனிலிவர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில்,“மிகச்சிறந்த இயற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று. ஆரோக்கியமான பானம் டீ. இதில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ், கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும், செரிமான உறுப்புகளுக்கும், சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன.
உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது. டீ உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது” என்கிறார்.
Download As PDF

கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள்


உலகின் உள்ள அத்தனை அழகையும் நாம் பார்க்க உதவி புரிவது கண்களே. அந்த கண்களை காக்க நாம் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை விட ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளை பின்பற்றினால் கண்களை பாதுகாக்கலாம்.
கண்களைக் காக்கும் வைட்டமின் ஏ: கண்களுக்கு அத்தியாவசிய தேவை விட்டமின் "ஏ". இதனால் கண்கள் பலத்தையும், நல்ல பார்வையையும் பெறும். விட்டமின் ஏ எல்லாவித ஆரஞ்ச் / மஞ்சள் நிற காய்கறிகளிலும், பழங்களிலும் கிடைக்கிறது. முக்கியமாக கேரட், ஆரஞ்ச், பரங்கிக்காய், மாம்பழம், பப்பாளி இவற்றில் விட்டமின் ஏ உள்ளது.
பசலைக்கீரை, கொத்தமல்லி கீரைகளிலும் உள்ளது. மாமிச உணவில் மீன், லிவர், முட்டைகள் இவற்றில் விட்டமின் ஏ கிடைக்கிறது.
விட்டமின் ஏயுடன் கூடவே விட்டமின் சியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். விட்டமின் சி கண்களில் கண்புரை வராமல் தடுக்கும். நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்ச், எலுமிச்சம்பழம், முட்டைக்கோஸ், குடமிளகாய் மற்றும் தக்காளியில் விட்டமின் சி உள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
திரிதோஷ கோளாறுகள்: கண் கோளாறுகள் உண்டாகும் காரணம் திரிதோஷ கோளாறுகள். வாததோஷத்தினால் கண்களைச் சுற்றி கருமை தோன்றும். வறட்சியினால் உலர்ந்து போகும். பித்ததோஷம் கண்கள் சிவந்து போதல், எரிச்சல் இவற்றை உண்டாக்கும். கபத்தால் கண்கள் அரிப்பு, நீர்வடிதல் போன்றவற்றை உண்டாக்கும்.
பழங்கள், காய்கறிகள்: தினசரி உணவில் பயத்தம் பருப்பு, முக்கிரட்டை கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை, கேரட், ஆப்பிள், மாதுளை, பப்பாளி, பாகற்காய், புடலங்காய் முதலியவற்றை சேர்த்துக் கொள்வது கண்களுக்கு நல்லது என்கிறது ஆயுர்வேதம்.
இது தவிர அரிசி, கோதுமை, பார்லி, பச்சைப் பயறு, கடலைப் பருப்பு, உளுந்து, சோளம் போன்ற உணவுகள் கண்ணுக்கு நன்மை தருபவை. வெந்தயம், வெந்தயக் கீரை, முருங்கைக்காய், முருங்கைக்கீரை, முட்டைக்கோஸ், பசலைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, ஜீரகம், கருமிளகு, லவங்கம், கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட் போன்ற காய்கறிகளையும் தவறாது உட்கொள்ள வேண்டும்.
பேரீட்சைப்பழம், அத்திப்பழம், மாதுளம்பழம், திராட்சை, இயற்கையாக பழுத்த மாம்பழம், ஆப்பிள், நெல்லிக்கனி, வாழைப்பழம், ஆரஞ்ச், கொய்யா, தக்காளி, கருப்பு திராட்சை, எலுமிச்சம்பழம், பப்பாளி, அன்னாசி, பலாப்பழம் முதலியவை கண்களுக்கு ஏற்றது.
எள் எண்ணெய், மீன் எண்ணெய், நதி மீன்கள், கோழி, சுறா மீன், ஆட்டின் ஈரல், முட்டை, பசும் பால், ஆட்டுப்பால், பசும்பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய், ஆட்டுப்பாலின் நெய், பசும்பாலிலிருந்து செய்யப்பட்ட வெண்ணெய், மோர், கிரீம் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.
மூலிகை கசாயங்களால் அடிக்கடி கண்களை கழுவுதல், பிரம்மி, நெல்லி, பிருங்கராஜ் மூலிகைகளின் தைலத்தை தலைக்கு தேய்த்து குளிப்பது கண்களுக்கு பாதுகாப்பானது என்கிறது ஆயுர்வேதம்.
எதை தவிர்க்க வேண்டும்: காராமணி, சோயாபீன், முலாம்பழம், தர்பூசணி, செந்தூரகம் எண்ணெய், லின்சிட் ஆயில், பிரெட், போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்.
Download As PDF

மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்


ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் சொல்லும் அறிவுரையே மாதுளம் பழத்தை அல்லது சாறை அதிகம் உட்கொள்ளுங்கள் என்பதுதான்.
அந்த மாதுளம் பழம் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அரிய மருத்துவக் குணத்தைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது என்று இப்போதுதான் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
வில்லோ மரத்திலிருந்து ஆஸ்பிரின் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்குச் சமமானது இந்தக் கண்டுபிடிப்பு என்று கூத்தாடுகிறது லண்டனிலிருந்து வெளியாகும் சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
மாதுளம் பழத்தைச் சாப்பிடுகிறவர்கள்கூட அதன் கதுப்புகளை உட்கொண்டு கொட்டையைத் துப்பிவிடுகின்றனர். அதன் ரசத்தை மட்டுமே குடிக்கின்றனர்.
ஆனால் அதன் தோல்,விதை, மஞ்சள் நிறத்தில் உள்ளே காணப்படும் மெல்லிய சவ்வுப்படலம், அதன் பட்டை, செடியின் தண்டுக்குள்ளே இருக்கும் சோறு என்று அனைத்துமே அரிய மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது.
அவற்றிலிருந்து எடுக்கப்படும் சாறு இதயத் துடிப்பைச் சீராக்கும், இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும், ரத்தக் கொதிப்பைக் குறைக்கும், உள் உறுப்புகளின் வீக்கத்தைக் கட்டுப்படுத்தி போக்கும், புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கும்.
மாதுளம் பழத்தின் அரிய மருத்துவத் தன்மைகள் அலோபதி என்கிற ஆங்கில மருத்துவர்களுக்கு வேண்டுமானால் இப்போது தான் தெரிந்திருக்கலாம். ஆனால் ஆயுர்வேதமும் சித்த வைத்தியமும் அதன் பலனை ஏற்கெனவே உணர்ந்தவைதான்.
Download As PDF

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்


மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.fruit vegetables Tips on washing fruit and vegetables
1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி என அழைப்பர். இதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.
2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.
3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.
4. செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
5. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
6. இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.
7. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும்.
8. எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.
9. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.
10. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.
Download As PDF

மருதாணியின் மருத்துவ குணங்கள்


மருதாணி என்ற மூலிகையை தெரியாத பெண்களே இருக்கமாட்டார்கள். பெரும்பாலான பெண்கள் அழகுக்காக மட்டும் பயன்படுத்தினாலும் உண்மையில் இதற்குள் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
கூந்தல் செழிப்பாக வளர சுத்தம் செய்த மருதாணிப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு பூக்கள் சிவக்கும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
இந்தத் தைலத்தை தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் செழிப்பாகும்.தலைவழுக்கையும் மறையும். நீடித்த தலைவலி நீங்கும்.
ஹிஸ்டீரியா நோய் தாக்கப்பட்ட பெண்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இவர்கள் மருதாணிப்பூவை தலையில் சூடி வந்தால் நோய் குறையும், தூக்கம் வரும்.
இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக் கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும் இதனால் உடல் வெப்பமும் தணியும்.
மருதாணிப் பூச்சாறு அரை தேக்கரண்டியளவு எடுத்து அரை டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் கலந்து பருக கை, கால்வலி குணமடையும்.
கால் கிலோ மருதாணிப் பூக்களை அரை லிட்டர் வேப்பெண்ணெயில் போட்டு காய்ச்சி வாத வலியுள்ள பகுதிகளில் தடவி வர பக்க வாத நோய் குணமடையும்.
காலில் தோன்றக்கூடிய கரப்பான் புண்களை ஆற்ற மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட விரைவில் ஆறும். நாள்பட்ட நீர் ஒழுகும் எக்ஸிமா என்னும் புண்களுக்கு மருதாணிப்பூவுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட விரைவில் குணமாகும்.
Download As PDF

கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவகுணங்கள்

நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் நமது உடலுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன.
கரிசலாங்கண்ணிக் கீரைக்கு கரிசாலை, கரப்பான், கையாந்தகரை என்ற வேறு பெயர்களும் உண்டு. இக்கீரையைப் பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ சாப்பிட்டு வர வேண்டும்.
இதை தினந்தோறும் தவறாது உட்கொண்டு வந்தால் ஆயுள் நீடிக்கும். உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். முகத்தில் தெளிவும், வசீகரமும் ஏற்படும்.
கரிசாலையைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களுக்கு வன்மையைக் கொடுக்கும். பித்த நீர், கப நீர் வெளியாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு கழுவி, வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கிவிட வேண்டும். வாயில் இருக்கும் சக்கையைக் கொண்டு பல் துலக்க வேண்டும். மேலும் கண்பார்வையைக் கூர்மையாக்கும்.
தேகத்திற்குப் பொற்சாயல் ஏற்படும். இக்கீரை குடலுறுப்பு நோய், காமாலை, குஷ்டம், வீக்கம் ஆகிய பல வியாதிகளைப் போக்கும். உடலுக்கு ஊட்டம் தரும்.
உடம்பின் உள்ளுறுப்புகள் அனைத் தும் நன்றாக இயங்க வேண்டுமா னால் கால்சியம் தேவை. கரிசலாங் கண்ணியைப் போல கால்சியமும் பாஸ்பரசும் இணைந்து அதிகமாக இருக்கக் கூடிய வேறு உணவுப் பொருள் இல்லையென்றே கூறலாம்.
இரத்த அழுத்தம், இருதய நோயுள்ளவர்களுக்கு கரிசலாங்கண்ணி ஒரு வரப்பிரசாதமாகும். புரதம் 4.4, கொழுப்பு 0.8, தாதுப் பொருள் 4.5, மாவுப் பொருள் 9.2, சக்தி 62 கிலோ கலோரி, கால்சியம் 306, பாஸ்பரஸ் 462, இரும்பு 8.9, வைட்டமின் இல்லை.
கரிசலாங்கண்ணிக் கீரையில் இரு வகை உண்டு.
1. வெள்ளைப் பூ கரிசலாங்கண்ணி,
2. மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி.
மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை மஞ்சள் காமாலை நோய்க்கு அற்புதமான மருந்தாகும். வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் கொஞ்சம் சத்து அதிகம்.
இவ்வளவு நன்மைகள் கொண்ட கரிசலாங்கண்ணிக் கீரையைத் தவறாமல் பயன்படுத்தி நலமாக வாழ்வோம்.
Download As PDF